தெலுங்குக்கு போகிறது சிவகார்த்திகேயனின் ஹீரோ... அங்க என்ன டைட்டில் வச்சிருக்காங்க பாருங்க!
Recommended Video
சென்னை: சிவகார்த்தியேன் நடித்து தமிழில் வெளியான ஹீரோ படம் தெலுங்கில் டப் ஆகிறது.
'இரும்புத்திரை' படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த படம், ஹீரோ.
அவர் ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இயக்குனர் பிரியதர்ஷன் - நடிகை லிஸி தம்பதியின் மகளான இவர், இந்தப் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.

யுவன் சங்கர் ராஜா
இவர்களுடன் பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜூன், இவானா, ரோபோ சங்கர், அழகம்பெருமாள் உட்பட பலர் நடித்திருந்தனர். கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்த இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார். கடந்த டிசம்பர் மாதம் இந்தப் படம் ரிலீஸ் ஆனது.

பேச்சுவார்த்தை
அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களின் கனவுகள், எப்படி சூறையாடப்படுகிறது என்பது இந்தப் படத்தின் கதை. இதன் கதையும் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய போஸ்கோ பிரபு என்பவர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கதை குறித்து புகார் செய்தார். பிறகு பேச்சுவார்த்தை, பஞ்சாயத்து, வழக்கு என்று தொடர்ந்தப் பின், படம் ரிலீஸ் ஆனது.

எதிர்பார்த்த வெற்றி
ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இந்தப் படம் இப்போது தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படுகிறது. அங்கு, சக்தி என்று டைட்டில் வைத்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சில படங்கள், ஏற்கனவே தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்டுள்ளன. இப்போது இந்தப் படத்தையும் டப் செய்து வெளியிடுகின்றனர். தெலுங்கில் கங்கா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து கோட்டபாடி ஜே.ராஜேஷ் இதை வெளியிடுகிறார்.

போஸ்ட் புரொடக்ஷன்
'இது எல்லா மொழிக்குமான கதை என்பதால், தெலுங்கில் வெளியிடுகிறோம். தெலுங்கில் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ராஜேஷ். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் சென்சார் குழு படத்தை பார்க்கிறது. அதன்பிறகு ரிலீஸ் தேதியை அறிவிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











