பராசக்திக்கு பல இடங்களில் கட், மியூட்.. தீ பரவட்டும் வார்த்தையையே தூக்கிட்டாங்க.. படத்தை போட்டு குதறிட்டாங்களே
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இழுபறி நீடித்தது. ஒருவழியாக இன்று சான்றிதழை வழங்கிவிட்டார்கள் அதிகாரிகள். ஆனால் படத்தின் பல இடங்களில் சென்சார் அதிகாரிகள் மியூட் போட சொல்லியிருக்கிறார்கள். மேலும் தீ பரவட்டும் என்ற வார்த்தைக்கும் மியூட் போட சொல்லியிருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியிருக்கும் பராசக்தி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை சம்பாதித்திருக்கிறது. ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டு மாணவர்கள் 60களில் நடத்திய போராட்டத்தை மையப்படுத்தி இந்தக் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர். தமிழ்நாட்டில் இதுபோன்ற படங்களுக்கு ரசிகர்கள் எப்போதுமே வரவேற்பை கொடுப்பார்கள் என்பதால் கண்டிப்பாக இப்படம் தரமான சம்பவத்தை செய்யும் என நம்பப்படுகிறது.
சென்சாரில் சிக்கல்: படம் ஜனவரி 14ஆம் தேதியிலிருந்து முன்கூட்டியே பத்தாம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் அதிகாரிகள் படத்தை பார்த்துவிட்டு சான்றிதழ் கொடுக்காமல் இருந்தார்கள். நாளை ரிலீஸ் என்ற நிலைமையில் இன்று பிற்பகல்வரையுமே படத்துக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை. எனவே திட்டமிட்டபடி பத்தாம் தேதி படம் ரிலீஸாகுமா என்ற சந்தேகம் அனைவருக்குமே எழுந்துவிட்டது.

கிடைத்த சான்றிதழ்: ஒருவேளை ஜனநாயகன் மாதிரி இப்படமும் அறிவிக்கப்பட்ட நாளில் ரிலீஸ் ஆகாதோ என்றும் பயம் கொள்ள ஆரம்பித்தார்கள். ஆனால் நல்வாய்ப்பாக படத்துக்கு யு/ஏ சான்றிதழை சென்சார் குழு வழங்கிவிட்டது. ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதால் சிறுவர்கள் இப்படத்தை பார்ப்பது கடினமாகிவிட்டது. சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான சிறுவர்கள் ரசிகர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் படம் வசூல் சாதனை செய்யும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
25 இடங்களில் கட், மியூட்: படத்தின் ரன்னிங் டைம் மொத்தம் இரண்டு மணி நேரம் 42 நிமிடங்கள் என தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் சென்சார் அதிகாரிகள் பராசக்தி படத்தில் எந்தெந்த் இடங்களில் கட் சொல்லியிருக்கிறார்கள். எந்தெந்த வார்த்தைகளுக்கு மியூட் போட சொல்லியிருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி மொத்தம் 25 இடங்களில் கட் மற்றும் மியூட்டை போட சொல்லியிருக்கிறது சென்சார் குழு. அதன்படி தீ பரவட்டும் என்ற வார்த்தைக்கு மியூட் போட சொல்லியிருக்கிறார்கள்.
குதறிவிட்டார்கள்: அதுமட்டுமின்றி மொழி திணிப்பு தொடர்பான வாய்ஸ் ஓவரில் திருத்தம் சொல்லியிருக்கும் சென்சார் குழுவினர், 'ஹிந்தி எனது கனவை அழித்தது' என்ற வசனத்துக்கு பதிலாக, 'என் ஒரே கனவை ஹிந்தி திணிப்பு எரித்தது' என மாற்ற சொல்லியிருக்கிறார்கள். மேலும் "ஆட்சியைக் கலைத்து விட்டு இங்கு வேறொருவர் வந்து உட்கார்ந்து, அண்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே "மக்கள் வெகுண்டெழுவார்களே!" என்ற அச்சமும் கூடவே எழும் இல்லையா? அந்த அச்சம் இருக்கிறவரையில் இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்! என பேரறிஞர் சொன்ன வார்த்தைகளும் படத்தில் இருந்தது என்றும் அதையும் சென்சார் அதிகாரிகள் தூக்கிவிட்டார்கள் எனவும் தெரிகிறது.
முக்கியமாக தீ பரவட்டும் என்ற வார்த்தைதான் பராசக்தி படத்தின் அடிநாதமாக இருந்தது. அந்த வார்த்தைக்கும் அதிகாரிகள் மியூட் போட சொன்னது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகமொத்தம் படத்தை சென்சார் அதிகாரிகள் குதறிவிட்டார்கள் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











