Amaran Box Office Day 5: அமரன் SKவை பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாற்றாமல் விடாது போலயே! 5 நாள் வசூல் விபரம்
சென்னை: சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் அமரன். இப்படம் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டினைச் சேர்ந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இதற்கு முன்னர் இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். படத்தினை சோனி பிக்சர்ஸ் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் விமர்சனம் மற்றும் வசூல் வெற்றிப் படமாக மாறியுள்ளது. படத்தின் ஐந்து நாள் வசூல் தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.
ஏற்கனவே கூறியதைப்போல் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மைய்யமாகக் கொண்டு அமரன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேஜர் முகுந்த் வரதாராஜன் கடந்த 2014ஆம் ஆண்டு தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டில் குண்டடி பட்டு காலமானார். இவரது வீர மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையுமே உலுக்கியது. இவரது வாழ்க்கை வரலாற்றில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிக்கப்போகின்றார்க்லள் என்ற அறிவிப்பு வந்ததும் பலருக்கும் எதிர்பார்ப்பு எகிறியது.

ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றினை படமாக எடுப்பதால், இந்திய ராணுவத் தளவாடங்களுக்கே சென்று படம் எடுக்க ஒட்டுமொத்த படக்குழுவும் முடிவு செய்தது. இதற்காக, அமரன் படத்தின் மொத்த கதையையும் இந்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்பித்து, அவர்களின் ஒப்புதல் மற்றும் பாதுகாப்புடன் காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத் தளவாடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.
சிறப்புக் காட்சி: படப்பிடிப்பின்போது இந்திய ராணுவம் படக்குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். மேலும், சில காட்சிகள் படமாக்கப்படுவதைப் பார்த்துவிட்டு, காட்சி படமாக்கி முடிந்தது, கரகோஷம் எழுப்பியுள்ளனர். படக்குழுவினருக்குப் பின்னர், இந்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள மேல்மட்ட அதிகாரிகள் படத்தினைப் பார்த்துவிட்டு, இந்திய ராணுவ வீரர்களுக்கு சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்தனர். மூத்த ராணுவ வீரர்கள் அவர்களது குடும்பத்தினர் என மொத்தம் 900 பேருக்கு அதிகமானோர் படம் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு பெரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
பாராட்டு மழை: படத்தினைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அதேபோல், சூப்பஸ் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார். படம் பார்த்த பலரும் படம் சிறப்பாக இருப்பதாக பாராட்டினர். பல இடங்களில் குறிப்பாக ஊட்டியில் படம் பார்த்த ரசிகர்கள், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு மரியாதை செய்தனர்.

வசூல்: படம் முதல் நாளில் ரூபாய் 42.3 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்ததாக படக்குழுவே அறிவித்தது. படத்திற்கு முதல் நான்கு நாட்களுமே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை கணக்கிட்டுப் பார்த்தால் படம் முதல் நான்கு நாட்களிலேயே ரூபாய் 150 கோடிகளை நெருங்கியிருக்க வேண்டும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஐந்தாவது நாளான நேற்று அதாவது நவம்பர் 4ஆம் தேதி படம் உலகம் முழுவதும் ரூபாய் 15 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. இதன் அடிப்படையில் படம் ஐந்து நாட்களில் ரூபாய் 170 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. ஆனால் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து படக்குழு இன்னும் எதுவும் கூறவில்லை.


Click it and Unblock the Notifications











