Amaran Box Office Day 6: ரிப்பீட் ஆடியன்ஸால் வேற லெவலில் கல்லா கட்டும் அமரன்.. 6 நாள் வசூல் நிலவரம்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கைபோடு போட்டு வரும் படம் அமரன். தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களில் அதிக பாராட்டுகளைப் பெற்ற படம் என்றால் அது அமரன் தான். படம் பார்த்த ரசிகர்கள் பலரும் கண்ணீருடனே வெளியே வந்து படத்தினைப் பாராட்டினார்கள். வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மைய்யமாகக் கொண்டே இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் ஆறு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
ஏற்கனவே கூறியதைப்போல் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மைய்யமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதால், படத்தின் க்ளைமேக்ஸ் தெரிந்தேதான் ரசிகர்கள் படம் பார்க்க வந்தனர். வந்த அனைவரையும் திருப்திப்படுத்தினார்கள் என்பதைக் காட்டிலும், மக்களுக்கு ராணுவ வீரர்களின் வாழ்க்கை எவ்வளவு சவால்நிறைந்ததாக உள்ளது என்பதை கூடுமானவரை அப்பட்டமாகக் காட்டியுள்ளனர்.

படத்தினை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். சோனி பிக்சர்ஸ் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இந்த தீபாவளிக்கு இவரது இசையில் தமிழில் அமரன் படமும், தெலுங்கில் லக்கி பாஸ்கர் படமும் வெளியாகி, இரண்டுமே பாராட்டுகளைப் பெற்று வருகின்றது. அமரன் படத்தினைப் பொறுத்தவரையில் படம் பார்த்த பொதுமக்கள் தொடங்கி முதலமைச்சர் வரை அனைவரும் பாராட்டினர்.

குறிப்பாக படம் பார்த்து முடித்த கையுடன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு போன் செய்து, படம் ரொம்ப டச்சிங்கா இருக்கு, க்ளைமேக்ஸ் காட்சியில கண்ணு கலங்கிடுச்சு எனக் கூறினார். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தினைப் பார்த்துவிட்டு, படக்குழுவினரை தனது இல்லத்திற்கு வரவழைத்து அவர்களைப் பாராட்டினார். அப்போது தனது அண்ணன், ராணுவத்தில் இருந்ததும், அவர் இந்தியா- சீனா போரில் குண்டடிபட்டது தொடர்பாகவும் கூறினார்.

பொதுமக்கள் படக்குழுவினரை பாராட்டியது மட்டும் இல்லாமல், பல இடங்களில் மேஜர் முகுந்த் வரதராஜனின் உருவப்படத்திற்கு கலங்கிய கண்களுடன் மலர் தூவி மரியாதை செய்தனர். படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பினை பலரும் பாராட்டினாலும், சிவகார்த்திகேயனை விடவும், சாய் பல்லவி அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் மிரட்டுகின்றார் எனக் கூறினார்கள். படத்தின் வெற்றி விழாவில் பேசும்போது, சிவகார்த்திகேயன் தனது தந்தையை நினைவு கூர்ந்து அழுதார். அதேபோல், படம் பார்த்த பலர் தன்னிடம் எதுவும் பேசாமல் தன்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டதாக சாய் பல்லவி கூறினார்.

படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 42.3 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது. இந்த வசூல் சிவகார்த்திகேயன் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் குவித்த படமாக உருவெடுத்துள்ளது. படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் நல்ல வசூலை குவித்துள்ளது. படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் வசூல் சீராக இருந்து வருகின்றது. ரிப்பீட் ஆடியன்ஸும் இருப்பதால் வசூல் சிறப்பாகவே உள்ளது. படம் கடந்த 6 நாட்களில் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 110 கோடிகள் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Click it and Unblock the Notifications











