சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா இணையும் படம்?.. டைட்டில் இதுவா?.. பட்டாசா இருக்கே ப்பா
சென்னை: சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த அமரன் திரைப்படம் மெகா ஹிட்டாகி உலகளவில் 350 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துவருகிறார். முதலில் இந்தப் படத்துக்கு புறநானூறு என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. அதில் சூர்யா ஹீரோவாக நடிக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் அந்தப் படத்திலிருந்து வெளியே வந்ததைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் உள்ளே வந்தார். இது அவருக்கு 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தற்போது எக்கச்சக்கமாக இருக்கிறது. டாக்டர், டான் என வரிசையாக இரண்டு படங்களில் நூறு கோடிகளை வசூல் செய்தார். அதனையடுத்து நடித்த பிரின்ஸ் திரைப்படம் தோல்வியடைந்தது. அந்த சறுக்கலை வைத்து சிவா இனி அவ்வளவுதான் என்று பலரும் கூறினார்கள். ஆனால் அந்தப் பேச்சை மாவீரன் படத்திலேயே அடித்து நொறுக்கிவிட்டார். மடோன் அஸ்வின் இயக்கியிருந்த அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து நடித்த அயலான் திரைப்படமும் கேப்டன் மில்லர் படத்தை சம்பவம் செய்து வென்றது.

அமரன் மெகா ஹிட்: சிவகார்த்திகேயனின் கரியரிலேயே அமரன் திரைப்படத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படத்தில் எஸ்கேவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து அந்தப் படம் தயாரானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது ஏகோபித்த ஆதரவு கொடுத்தார்கள். விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்ட படம் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது.
300 கோடி க்ளப்: அதாவது அந்தப் படம் உலகளவில் 350 கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதுதான் சிவாவின் கரியரிலேயே உச்சபட்ச வசூல் செய்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிவாவின் நடிப்பும் அவ்வளவு மெருகேறியிருந்தது. இப்படி பல விதங்களில் இந்தப் படம் சூப்பர் அப்ளாஸை அள்ளியதன் காரணமாக சிவாவின் மார்க்கெட்டும் சரசரவென்று உயர்ந்தது. அடுத்ததாக அவர் ஏ.ஆர்.முருகதாஸுடனும், சிபி சக்கரவர்த்தியுடனும், வெங்கட் பிரபுவுடனும் ஒரு படத்தில் பணியாற்றுகிறார்.
சுதா கொங்கராவுடன்: இதற்கிடையே சூரரைப் போற்று படத்தை இயக்கி கவனம் ஈர்த்த சுதா கொங்கரா சூர்யாவை வைத்து புறநானூறு என்ற படத்தை இயக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து சூர்யா விலகினார். அவரது விலகலை தொடர்ந்து சுதாவின் கண்கள் சிவா மீது பட்டது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். நிச்சயமாக இந்தப் படமும் சிவாவின் கரியரில் முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
வதந்திக்கு முற்றுப்புள்ளி: இந்தப் படத்தின் பூஜை போடப்படுவதற்கு முன்பு ஒரு வதந்தி பரவியது. அதாவது தாடியுடன் ப்ரோமோ வீடியோ ஷூட்டுக்கு சிவகார்த்திகேயன் வந்ததால் அவருக்கும் சுதாவுக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதெல்லாம் வெறும் வதந்திதான் என்பதை நிரூபிக்கும் விதமாக நல்லபடியாக பூஜை போடப்பட்டது. மேலும் ஷூட்டிங்கும் தொடங்கி மும்முரமாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
படத்தின் டைட்டில்: அதாவது இந்தப் படத்துக்கு முதலில் 1965 என்று பெயர் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது படத்துக்கு அந்தப் பெயர் இல்லை பராசக்தி என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பராசக்தி என்ற பெயர் கொண்ட படத்தில்தான் சிவாஜி கணேசன் அறிமுகமானார். அந்தப் படம் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி வைத்தது. எனவே அந்த சென்ட்டிமென்ட்படி இந்த பராசக்தியும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











