Soori: வெற்றிமாறனால் சிவகார்த்திகேயனிடம் குமுறிய சூரி.. அந்த பயம் நியாயமானது தானே! அப்படி என்ன ஆச்சு?
சென்னை: நடிகர் சூரி, இன்றைக்கு தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த கதை நாயகனாக வளர்ந்து வருகின்றார். இதுவரை இவர் கதையின் நாயகனாக நடித்து 4 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நான்கு படங்களும் பெரும் வெற்றிப் படங்களாக மாறியுள்ளது. நகைச்சுவை நடிகராக இருந்த சூரியை கதையின் மையக் கதாபாத்திரமாகக் கொண்டு ஒரு படத்தினை எடுக்கலாம் என திட்டமிட்டு, அதனை நடத்திக் காட்டி, சூரியின் திரை வாழ்க்கையில் தனி அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தவர், இயக்குநர் வெற்றி மாறன். ஆனால் வெற்றி மாறன் செய்த செயல், சூரியை பதட்டத்திற்கு ஆளாக்கியுள்ளது. இது குறித்து சிவகார்த்திகேயன் மேடை ஒன்றில் தெரிவித்துள்ளார். அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நகைச்சுவை நடிகர் சூரி கதையின் நாயகனாக மாறிய படம் என்றால் அது விடுதலை பாகம் 1 படம்தான். இந்தப் படத்தின் மூலம் சூரி நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லை, கதாநாயகன் மெட்டீரியல் என பலருக்கும் தெரியவந்தது. சூரிக்குள் சிறைப்பட்டுக் கிடந்த நடிகனை, இன்னும் சொல்லப்போனால் ஒரு மகா நடிகனை அடையாளம் காட்டியுள்ளார் வெற்றி மாறன். இது வரை அவர், கதையின் நாயகனாக நடித்த படங்கள் எதுவுமே மக்களுக்கு பிடிக்காமல் இல்லை. மேலும் காமெடியனான தான், டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடித்துத்தான் மக்கள் மத்தியில் தான் ஒரு ஹீரோ மெட்டீரியல் என்பதைப் புரிய வைக்க முடியும் என, தெளிவாக கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

சூரியைச் சந்தித்து, விடுதலை படம் குறித்து வெற்றி மாறன் பேசியுள்ளார். படத்தின் கதை குறித்து கூறிய பின்னர் வெற்றி மாறன் மற்ற எந்த படங்களிலும், கமிட் ஆக வேண்டாம் எனவும் கூறியுள்ளார். வெற்றி மாறன் தன்னை கதையின் நாயகனாக வைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டுள்ளார், என்பதைக் கேட்டதுமே, சூரிக்கு கொஞ்சம் பயம் ஏற்பட்டுவிட்டது. இது தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயனிடம் பேசியுள்ளார். இதனை, முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பழைய வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
சிவகார்த்திகேயன்: அதாவது சிவகார்த்திகேயன் பேசும்போது, " ஒரு நாள் சூரி அண்ணன் எனக்கு போன் செய்தார். தம்பி, உங்கிட்ட கொஞ்சம் பேசனும் எனக் கூறினார். நான் ஏதோ பிரச்னை போல என நினைத்துவிட்டேன். உடனே நேரில் வாங்க அண்ணே எனக் கூறினேன். வந்தவர், அதான் தம்பி, வெற்றி மாறன் அண்ணன் கூப்புட்டாரு தம்பி என்றார். நான் உடனே சூப்பர் அண்ணா என்றேன். அதற்கு அவர், அதான் தம்பி, நம்பள ஒரு இதா வெச்சு ஒரு படம் எனக் கூறினார். உடனே நான், என்ன அண்ணா சொல்றீங்க, சூப்பர் அண்ணா என்றேன்.

சூரி பதற்றம்: அதற்கு அவர், தம்பி.. தம்பி எனக்குத்தான் பதற்றமா இருக்கு, அண்ணன் சூப்பர்னு தெரியும்.. எப்படி தம்பி.. என்ன செய்யலாம்.. எனக் கேட்டுள்ளார். உடனே நான், எந்த படமா இருந்தாலும் சரி, அவரு சொல்றத கேட்டு நடிச்சிட்டு வந்துடுங்க அண்ணே, உங்க டைமன்ஷனையே மாத்தி விட்டுடுவாரு எனக் கூறினேன். உடனே அவர், தம்பி அந்த முதல் படம் பண்ணீரலாம் தம்பி, அதற்கு அப்பறம் வேற யாரும் என்னைக் கூப்பிடவில்லை என்றால் என்ன தம்பி செய்வது? எனக் கேட்டார்" என சிவகார்த்திகேயன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நியாயம்: சிவகார்த்திகேயன் சொல்வதைக் கேட்கும் போது சிரிப்பு வந்தாலும், சூரிக்கு ஏற்பட்ட பயம் என்பது நியாயமானதுதானே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அதேபோல் விடுதலை பாகம் 1இல் நடித்த பின்னர், சூரியின் திரை வாழ்க்கையே மொத்தமாக மாறிவிட்டது. அவரது நடிப்பில் தற்போது மாமன் என்ற படம் உருவாகி வருகின்றது.


Click it and Unblock the Notifications











