வெற்றி உற்சாகத்திற்கு மத்தியில் அமைதியாக பிறந்த நாளை கொண்டாடும் சிவகார்த்திகேயன்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 31 வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். ரஜினி முருகன் அவரை உச்சத்தில் கொண்டு போய் வைத்துள்ள போதிலும் அடக்கமாக, அமைதியாக தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு இணையாக சிவகார்த்தியின் பிறந்தநாளை #HBDsivakarthikeyan என்று ஹெஷ்டேக் போட்டு ரசிகர்கள் கொண்டாட அது இந்தியளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.
வெறும் 9 படங்களிலேயே பாக்ஸ் ஆபிஸ் நாயகன் என்ற அளவிற்கு இன்று வளர்ந்து நிற்கும் சிவாவின் ஒருசில பண்புகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

கிடைத்த சந்தர்ப்பங்களை
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜெயித்தவர்கள் கிடையாது என்ற வரலாற்றை தகர்த்தெரிந்த முதல் நபர் சிவகார்த்திகேயன். "நடிச்சா ஹீரோதான் இந்த காமெடி, வில்லன், அமெரிக்க மாப்பிள்ளை இதெல்லாம் வேண்டாம்" என்று சொல்லாமல் சிறிய வேடங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர். மெரீனா, 3 ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

படிப்படியான வளர்ச்சி
ஸ்டாண்ட் -அப் காமெடி, நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று சின்னத்திரையில் இவரின் வளர்ச்சி மெச்சும்படி இருந்தது. இவர் தொகுத்து வழங்குகிறார் என்ற காரணத்திற்காக விஜய் டிவி நிகழ்ச்சிகளை பார்த்தவர்கள் ஏராளம். அதே போல வெள்ளித்திரையில் காமெடியனாக அறிமுகமாகி 4 வருடங்களில் ஒரு மாஸ் ஹீரோ அளவுக்கு வளர்ந்து நிற்கிறார். இதெல்லாம் சிவகார்த்திகேயனுக்கு அடித்த அதிர்ஷ்டம் என்று கூறினாலும் இந்த வளர்ச்சியை அவர் ஒரேநாளில் எட்டி விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தைப் போல
இன்று வாழ்த்து சொல்லும் பலரும் அஜீத்தை சிவாவுடன் ஒப்பிட்டு வருகின்றனர். தல அளவிற்கு இன்னும் சிவா வளரவில்லை என்றாலும் கூட, அவரைப்போல எந்தப் பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்கு வந்து ஜெயித்தவர் சிவகார்த்திகேயன். அஜீத் பில்லாவில் கூறுவதைப் போல தனது வாழ்வில் ஒவ்வொரு நிமிடங்களையும் சிவகார்த்திகேயன் அவராகவே செதுக்கிக் கொண்டார் என்பதுதான் உண்மை.

மக்களின் நாயகன்
பாக்ஸ் ஆபிஸ் வெற்றி நாயகன் என்ற புகழ் மட்டுமின்றி சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்து மக்களின் நடிகனாகவும் சிவா மாறியிருக்கிறார். சிவகார்த்திகேயன் அனைவரையும் கவர்ந்து விட்டார் என்று ஒரு விழாவில் இளைய தளபதி விஜய்யே இதனை ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சலடி
தனது எதிர்நீச்சல் படத்தில் தடைகளைத் தாண்டி தடகள வீரனாக மாறுவது போல, சொந்த வாழ்விலும் தடைகளைத் தாண்டி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.இதற்குக் காரணம் ஆரம்பித்த இடத்திலேயே நின்று கொண்டிருக்காமல் அடுத்தடுத்து வாய்ப்புகளைத் தேடிய சிவாவின் தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் தான்.

வருத்தப்படுத்தாத சங்கத் தலைவர்
சிவகார்த்தியின் படங்கள் என்றாலே கண்டிப்பாக வாய் விட்டு சிரிக்கலாம் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்ததால், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர் பட்டம் சிவாவிற்கு ரொம்பவே பொருத்தம். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை அவரது புதிய படத்தின் பெயர் வெளியாகிறது. இந்நிலையில் எங்கள் வீட்டுப் பிள்ளையாக இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன் மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகிறோம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன்!


Click it and Unblock the Notifications











