Thalaivar 171 - சிவகார்த்திகேயனின் கனவை நிறைவேற்றுகிறாரா லோகேஷ் கனகராஜ்?. தலைவர் 171ல் சம்பவம் இருக்கோ
சென்னை: Thalaivar 171 (தலைவர் 171) ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது.லியோவுக்கு முன்னதாக அவர் இயக்கியிருந்த மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய நான்கு திரைப்படங்களுமே மெகா ஹிட்டாகின. இதன் காரணமாக லியோ படத்தின் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. அதிலும் விஜய்க்கு பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே சரியாக போகாததால் இப்படத்தின் மீது பெரும் நம்பிக்கையை வைத்திருந்தனர் ரசிகர்கள்.

சறுக்கல்: ஆனால் லியோ திரைப்படம் விஜய் ரசிகர்களை மட்டும்தான் திருப்திப்படுத்தியதே ஒழிய மற்றவர்களை திருப்திப்படுத்தாமல் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. அதேசமயம் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக லியோ படத்தின் சக்சஸ் மீட்டும் கடந்த மாதம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது.
லோகேஷின் அடுத்த படம்: இதற்கிடையே லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிக்கொண்டிருந்தபோதே அடுத்ததாக ரஜினியின் படத்தை அவர் இயக்கப்போகிறார் என்ற தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அண்மையில் வெளியானது. தலைவர் 171 என்று இப்போதைக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தனி ரூம்: ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கும் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆக வேண்டும் என ரசிகர்கள் முதல் ரஜினிகாந்த் வரை விரும்புகிறார்கள். எனவே அதற்கான அத்தனை வேலைகளிலும் இறங்கியிருக்கிறார் லோகி. இதற்காக அவர் என்ன கேட்டாலும் செய்துகொடுக்கும் மூடில் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இருக்கிறது. அவர் கதை எழுதுவதற்காக பெசண்ட் நகரில் கடற்கரையை பார்த்தபடி ஒரு சொகுசு ரூமை வாடகைக்கு பிடித்துக்கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
வேலை ஆரம்பம்: சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய லோகேஷ் கனகராஜ், 'ரஜினியின் படத்துக்கான கதையை எழுத ஆரம்பித்துவிட்டேன். அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரலில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும்' என கூறியிருந்தார். இந்நிலையில் தலைவர் 171 படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி கோலிவுட்டில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவகார்த்திகேயன்: அதாவது இந்தப் படத்தில் பல நடிகர், நடிகைகள் நடிக்கலாம் என கூறப்படுகிறது. முக்கியமாக சிவகார்த்திகேயனை இந்தப் படத்தில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்காக சமீபத்தில் இரண்டு பேரும் நேரில் சந்தித்து பேசியதாகவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது. சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த்தின் வெறித்தனமான ரசிகர் ஆவார். ஜெயிலர் படத்திலும் அவர் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை என்று பிற்பாடு தெரியவந்தது.
லோகேஷ் கனகராஜ் மல்டி ஸ்டாரர் படம் இயக்குவதில் ஆர்வம் உடையவர் என்பதால் அநேகமாக இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கலாம் என்றே பெரும்பாலானோரால் கருதப்படுகிறது. நிறைவேறுமா சிவாவின் கனவு.. பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











