Suriya - அடுத்த முதலமைச்சர் சூர்யா?.. ஏழரையை ஆரம்பித்த ரசிகர்கள்.. எச்சரித்த சிவக்குமார்
சென்னை: Suriya (சூர்யா) அடுத்த முதலமைச்சர் சூர்யாதான் என ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியதால் சிவக்குமார் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டார் என தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் சூர்யா. கதை தேர்வில் சமீபகாலமாக தரமாக செயல்பட்டுவருகிறார். அந்தவகையில் அவர் நடித்த ஜெய் பீம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல் சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்த சூரரைப் போற்று திரைப்படம் மெகா ஹிட்டாகி சூர்யாவுக்கு தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.

சறுக்கிய எதற்கும் துணிந்தவன்: இரண்டு மெகா ஹிட் படங்களுக்கு பிறகு எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார் சூர்யா. படத்தின் கதைக்களம் சிறப்பானதாக இருந்தாலும் படம் சறுக்கலையே சந்தித்தது. இதனையடுத்து பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டாகி அதிலிருந்து விலகினார். தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசலில் நடிக்க கமிட்டாகியிருக்கும் அவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்துவருகிறார்.
கங்குவா: சிவா - சூர்யா இணைந்திருக்கும் படத்திற்கு கங்குவா என பெயரிடப்பட்டுள்ளது. கங்குவா என்ற நெருப்பின் மகன் என்று அர்த்தம். பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிவரும் படம் கொரியன், ஜப்பான், சீனா உள்ளிட்ட பத்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது. திஷா பதானி, நட்டி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். சூர்யாவின் கரியரிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கலக்கல் க்ளிம்ப்ஸ்: இந்தச் சூழலில் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி கடந்த 23ஆம் தேதி கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகின. அதை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் படம் மெகா ஹிட்டடிக்கும் என்றனர். அதேபோல் படம் முழுக்க முழுக்க சரித்திர கால கதையாக இருக்கும் என க்ளிம்ப்ஸை பார்த்து ரசிகர்கள் முடிவு செய்திருந்த சூழலில்; சரித்திர கதை படத்தில் ஒரு பகுதிதான். மற்றபடி கோவாவில் தற்போதைய காலத்தில் நடைபெறும் கதையாகத்தான் கங்குவா இருக்கும் என தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போஸ்டர்கள்: சூர்யாவின் பிறந்தநாளை படக்குழு க்ளிம்ப்ஸ் வெளியிட்டு கொண்டாட ரசிகர்களோ நலத்திட்ட உதவிகள் செய்தும்; போஸ்டர் ஒட்டியும் கொண்டாடினர். அப்படி அவர்கள் ஒட்டிய ஒரு போஸ்டர் சூர்யா வீட்டுக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது, அடுத்த முதலமைச்சர் சூர்யா என்ற போஸ்டரை பார்த்த சிவக்குமார் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டதாகவும் சூர்யாவை அழைத்து இது தேவையில்லாத பிரச்னையை கிளப்பும். இனி இப்படி நடக்காதபடி பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே சூர்யாவின் பிறந்தநாள் அன்று பேனர் வைக்க முயன்ற இரண்டு ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











