எம்ஜிஆர் போல விஜயகாந்த் முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டியவர்.. அஞ்சலி செலுத்திய சிவகுமார் உருக்கம்!
சென்னை: விஜயகாந்த் மறைவுக்கு ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியும் வந்து அஞ்சலி செலுத்தியதை பார்த்து மனசுக்கு ரொம்பவே நிறைவா இருந்துச்சு, அந்த அளவுக்கு இந்த துறைக்கு விஜயகாந்த் ஆற்றிய பணிகள் ஏராளம். எம்ஜிஆர் போலவே சினிமாவிலும், அரசியலிலும் சாதித்தவர் விஜயகாந்த். வருங்காலத்தில் முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டியவர் துரதிர்ஷடவசமாக நம்மை விட்டுப் பிரிந்து சென்று விட்டார் என உருக்கமாக நடிகர் சிவகுமார் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் பேசியுள்ளார்.
சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்ததும் இறுதியாக விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவே இல்லை. இருவரும் வரமுடியாத அளவுக்கு வெளிநாடுகளில் இருந்தனர். இந்நிலையில், சென்னை திரும்பிய கார்த்தி இன்று தனது தந்தை சிவகுமாருடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு நடிகர் சங்கம் சார்பில் விரைவில் இரங்கல் கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

சூர்யா ஏன் வரவில்லை: நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாடி வந்த நிலையில், விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டதுமே காரில் சென்றுக் கொண்டிருந்தபடியே பெரியண்ணா விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து இருந்தார். நேற்று மும்பை திரும்பிய நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளை மும்பையில் விட்டு விட்டு விரைவில் சென்னைக்கு வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கார்த்தி அறிவிப்பு: ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த கார்த்தி சென்னை திரும்பிய நிலையில், விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் தழு தழுத்த குரலில் கலங்கிய உள்ளத்தோடு "விஜயகாந்த் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாதது என் வாழ்நாள் முழுவதும் குறையாகவே இருக்கும்" என்றும் வரும் 19ம் தேதி நடிகர் சங்கம் சார்பில் மிகப்பெரிய அளவிலான இரங்கல் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
முதல்வர் ஆகியிருக்க வேண்டியவர் விஜயகாந்த்: தனது மகன் கார்த்தி உடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திய மூத்த நடிகர் சிவகுமார், "எம்ஜிஆர் போல சினிமாவிலும், அரசியலிலும் மிகப்பெரிய ஆளுமையாக மாறியவர் விஜயகாந்த். நடிகர்களூக்கும் மக்களுக்கும் வாரி வாரி வழங்கிய கொடையுள்ளம் கொண்டவர். முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டியவர், துரதிர்ஷ்டவசமாக நம்மை எல்லாம் விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்த மண் இருக்கும் வரை மக்கள் மனதில் மறையாமல் இருப்பார் விஜயகாந்த்" என புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











