Amaran: அமரனை பாராட்டிய சிவக்குமார் குடும்பம்.. அட ஜோதிகாவும் சூர்யாவும் இருக்காங்களே!
சென்னை: சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் அமரன். இந்தப் படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை சோனி பிக்சர்ஸ் மற்றும் ராஜ் கமல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படம், வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மைய்யமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படம் பார்த்த பலரும் படத்தினைப் பாராட்டிய நிலையில், தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான சிவக்குமார் மற்றும் அவரது மூத்த மகனும் நடிகருமான சூர்யா மற்றும் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகாவும் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளனர்.
அமரன் படம் வெளியானதில் இருந்தே பாராட்டு மழையில்தான் உள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும் வசூலிலும் படம் தொய்வில்லாமல் பாக்ஸ் ஆபிஸை நிறைத்து வருகின்றது. படம் முதல் நாளே உலகம் முழுவதும் ரூபாய் 42.3 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது. மேலும் படம் இதுவரை 5 நாட்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளது. இதில் ஐந்து நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் ஏறக்குறைய ரூபாய் 150 கோடிகள் வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றது.

படம் ரிலீஸ் ஆன நாளில் படம் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு போன் செய்து வாழ்த்தினார். குறிப்பாக, ’படம் ரொம்ப டச்சிங்கா இருக்கு, க்ளைமேக்ஸ் பாக்கும்போது கண்ணு கலங்கிடுச்சு’ எனக் கூறினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. அதேபோல் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் வரை பலரும் படத்தினையும் படக்குழுவினரையும் பாராட்டி வருகின்றனர்.

பர்ஸ்னல் டச்: அதேபோல் படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார். குறிப்பாக தனது பாராட்டுகளைத் தெரிவிக்கும்போது, தனது அண்ணன், இந்தியா - சீனா போரில் கலந்து கொண்டு குண்டடிபட்டதை நினைவு கூர்ந்தார். மேலும் படத்தினை பர்ஸ்னல் டச்சுடனேதான் பார்த்ததாகவும் கூறினார். ஒட்டுமொத்த படக்குழுவையும் எவ்வளவு பாராட்டினாலும் அது குறைவுதான் எனக் கூறினார். கமல்ஹாசன் படக்குழுவினருக்கு பாராட்டு மடல் எழுதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

கண்ணீர்: படத்தின் வெற்றி விழா நேற்று அதாவது, நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. அதில் பேசும்போது சிவகார்த்திகேயன் பேசும்போது, தான் இந்தப் படத்தில் நடிக்க முக்கியமான காரணம் மறைந்த அவரது தந்தைதான் எனக் கூறினார். தனது தந்தை குறித்த நினைவுகளை அவர் பகிர்ந்து கொள்ளும்போது கண்கள் கலங்கியபடியே இருந்தார். இது பலரையும் கண்களைக் கலங்க வைத்தது. படம் பார்த்த பலரும் இப்படம் சிவகார்த்திகேயனின் வழக்கமான படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதாக கூறி பாராட்டினார்கள். அதேபோல் சாய் பல்லவி தான் ஏற்று நடித்த இந்து ரெபேக்கா வர்ஹீஸ் கதாபாத்திரத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என பாராட்டினார்கள்.

சூர்யா - ஜோதிகா: இந்நிலையில் படம் பார்த்த தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான சிவக்குமார், அவரது மகனும் நடிகருமான சூர்யா, சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா ஆகியோர் படக்குழுவினரைப் பாராட்டினார்கள். குறிப்பாக படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, ராஜ் கமல் புரடெஷ்சன்ஸின் மகேந்திரன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்தினார்கள். இது தொடர்பான புகைப்படங்களை ராஜ் கமல் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.



Click it and Unblock the Notifications











