மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்
சிறுவர்களுக்கான படமாக உருவாகிய 'மான்ஸ்டர்' படம் மூலம் ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர், மீண்டும் சிறுவர்களுக்கான மற்றொரு படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
அஜித் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'வாலி' படத்தின் மூலம் இயக்குநரான எஸ்.ஜே.சூர்யா, விஜயை வைத்து 'குஷி' என்ற சூப்பர் ஹிட் படத்தையும் இயக்கினார். இதையடுத்து தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் திரைப்படம் இயக்கியவர், தான் இயக்கிய 'நியூ' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சிம்ரன் ஹீரோயினாக நடித்த இப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தான் இயக்கி நடித்த 'நியூ' பெற்ற வெற்றியை 'அன்பே ஆருயிரே' பெறவில்லை என்றாலும், ரசிகர்கள் எஸ்.ஜே.சூர்யாவை நடிகராக ஏற்றுக் கொண்டார்கள். இதையடுத்து நடிப்பில் தனக்கென்று தனி பாணியை வகுத்துக் கொண்டு பயணிக்க தொடங்கிய எஸ்.சூர்யா, 'கள்வனின் காதலி', 'திருமகன்' போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால், அப்படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இருப்பினும், தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யா, தானே இயக்கி நடிக்காமல் பிற இயக்குநர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றிக் கொடுக்க வேண்டும், என்பதில் உறுதியாக இருந்தார். அதன்படி, தொடர்ந்து 'வியாபாரி', 'நியூட்டனின் மூன்றாம் விதி' ஆகியப் படங்களில் நடித்தார். ஆனால், அப்படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால், பவன் கல்யாணை வைத்து 'புலி' என்ற தெலுங்குப் படத்தை இயக்கினார். அப்படம் தோல்வியடைந்ததால், சில வருடங்கள் நடிக்காமலும், படம் இயக்காமல் எஸ்.ஜே.சூர்யா இருந்தார்.

2 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு விஜயின் 'நண்பன்' படத்தில் சிறு வேடத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் 'இசை' என்ற படத்தை இயக்கி நடித்தார். அப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'இறைவி' படத்தில் நடித்து பாராட்டுப் பெற்றார். பிறகு 'ஸ்பைடர்' படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர், விஜயின் 'மெர்சல்' படத்திலும் வில்லனாக அதிரடி காட்டினார்.

தொடர்ந்து வில்லனாக நடித்தாலும், நடிகராக வெற்றி பாதையை நோக்கி பயணிக்க தொடங்கிய எஸ்.ஜே.சூர்யா, 'மான்ஸ்டர்' படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்தார். சிறுவர்களுக்கான படமாக உருவாகிய இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படத்தையடுத்து அமிதாப் பச்சனுடன் இணைந்து 'உயர்ந்த மனிதன்' உள்ளிட்ட சில படங்களில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

இதற்கிடையே, ராதா மோகன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா ஒரு படத்தை தயாரித்து ஹீரோவாகவும் நடிக்க தொடங்கினார். பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினாலும், படத்திற்கு தலைப்பு வைக்கப்படவில்லை. அதே சமயம், படம் எந்த மாதிரியான ஜானர் என்பதையும் படக்குழு தெரிவிக்கவில்லை.
'மொழி', 'அபியும் நானும்', 'காற்றின் மொழி' என பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கும் ராதா மோகன் படம் என்றாலே, தென்றல் காற்று போல நம்மை வருடிச் செல்லும், எதார்த்தமான கமர்ஷியல் படங்களாக இருக்கும். ஆனால், அவர் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இயக்கும் இப்படம் எப்படி இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது.
இந்த நிலையில், ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படம் சிறுவர்களை குறி வைத்து உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் குடும்பத்தினர் தியேட்டர்களுக்கு வந்தால் தான் படங்கள் ஓடும் என்பதால், சிறுவர்களுக்கான படம் எடுக்க வேண்டும், என்ற ராதா மோகனின் முடிவுக்கு, எஸ்.ஜே.சூர்யா ஓகே சொல்லிவிட்டாராம். அதன்படி, 'மான்ஸ்டர்' படம் போல சிறுவர்களை குறி வைத்து உருவாகும் எஸ்.ஜே.சூர்யாவின் இப்படத்திற்கு 'பொம்மை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











