'ரஜினி, முருகதாஸ் படத்தில் அமிதாப்... இப்டி நடக்கும்னு கனவுல கூட நினைக்கல'... எஸ்.ஜே.சூர்யா டிவீட்!
அமிதாப்புடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.
சென்னை: அமிதாப் பச்சனுடன் தான் நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா.
வாலி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. குஷி, நியூ என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்த அவர், நடிப்பிலும் கலக்கி வருகிறார்.
சமீபத்தில் மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தமிழ் சினிமாவில் முக்கியமான குணச்சித்திர நடிகராக அவர் உயர்ந்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக உருவாகி வருகிறது உயர்ந்த மனிதன். இதற்கு காரணம், அப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பது தான். இத்தனை ஆண்டுகளில் அமிதாப் நேரடியாக நடிக்கும் முதல் தமிழ் படம் இது தான்.
எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி
அமிதாப்புடன் நடிப்பதால் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அபிதாப்புடன் இருக்கும் சில படங்களுடன் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர். அதில், "எனது வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் இது. நான் கனவிலும் நினைத்திராத ஒன்றை நிறைவேற்றி வைத்ததற்காக, கடவுள், தாய், தந்தைக்கு நன்றி. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், ஏ.ஆர்.முருகதாசுக்கும் இதனை நான் பகிர்கிறேன்", என அவர் பதிவிட்டுள்ளார்.
முருகதாஸ், ரஜினி படத்தில்...
எஸ்.ஜே.சூர்யாவின் இந்த டிவீட்டை அவரது ரசிகர்கள் பலரும் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் அமிதாப் இருப்பாரோ என அவர்கள் சந்தேகிக்க தொடங்கிவிட்டனர். இதையடுத்து அந்த பதிவிற்கு கீழ் ஒரு பெரிய விவாதமே தொடங்கிவிட்டது.
தவறாக புரிந்துகொண்டனரா?
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் அமிதாப் இருப்பாரோ என ஒரு சிலர் நினைக்க, மற்ற சிலரோ அந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக புரிந்துகொண்டனர். இதனை விளக்கியும் அவர்கள் டிவீட் போட ஆரம்பித்துவிட்டனர்.
சாரே கொல மாஸ்
'மரணம்.. மாசு...மரணம்', 'சாரே கொல மாஸ் சாரே', 'நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு ஒன்னும் புரியலையே' என சிலரும் பதிவிட்டுள்ளனர். மொத்தத்தில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த எஸ்.ஜே.சூர்யா போட்ட டிவீட் பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. ஆனால் சில தெளிவான ரசிகர்கள், எஸ்.ஜே.சூர்யாவின் டிவீட்டை சரியாக புரிந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











