நடிப்பு அரக்கன்னு சரியாக தான் சொல்றாங்க.. சிவாஜி கணேசனையும் விட்டு வைக்கலை.. எஸ்.ஜே. சூர்யா அசத்தல்!
சென்னை: தமிழ் சினிமா சார்பாக நடத்தப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, பராசக்தியில் சிவாஜி கணேசன் பேசும் வசனத்தை பேசி நடித்துள்ள வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
அண்மை காலங்களில் எஸ்ஜே சூர்யாவின் வளர்ச்சி பலரையும் வியக்க வைத்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான "இறைவி" படம் மூலம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய எஸ்ஜே சூர்யா, அதன்பின் ஸ்பைடர், மெர்சல் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரம்மிக்க வைத்தார். அதேபோல் திடீரென ஹீரோவாக நடித்த மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை அவருக்கு வேறு பரிணாமத்தை உருவாக்கியது.

வெற்றி நாயகன்: இதனால் எஸ்.ஜே. சூர்யாவின் மார்க்கெட் உயர்ந்ததுடன் டபுள் ஹீரோ சப்ஜெட்களில் நாயகராக தோன்றுவதும் அதிகமாகியது. டான், மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நாயகர்களுக்கு இணையான கதாபாத்திரத்தை ஏற்று ரசிகர்கள் மத்தியில் அதிகளவிலான அப்லாஸை அள்ளினார் எஸ்.ஜே. சூர்யா.
இதன் காரணமாக இந்தியன் 2, கேம் சேஞ்சர், தனுஷின் 50வது படம், நானி நடிப்பில் உருவாகி வரும் சனிபோதா சனிவாரம் ஆகிய படங்களில் நாயகர்களுக்கு இணையான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோல் என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் வித்தியாசத்தை அள்ளி கொடுக்கும் எஸ்.ஜே. சூர்யாவை ரசிகர்கள் நடிப்பு அரக்கன் என்று கொண்டாடி வருகின்றனர்.
செம பாடி லேங்குவேஜ்: ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரி பாணியிலான பாடி லேங்குவேஜை வெளிப்படுத்தி வரும் எஸ்.ஜே. சூர்யா, தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வலம் வருகிறார். வடிவேலுவை எப்படி கார்ட்டூன் கதாபாத்திரங்களின் உடல்மொழியில் ரசிகர்களை கவர்வாரோ, கிட்டத்தட்ட அப்படியான நடிப்பை எஸ்ஜே சூர்யா வெளிப்படுத்தி வருவது ரசிகர்களிடையே வித்தியாசமான அனுபவத்தை கொடுத்து வருகிறது.
தற்போது எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்புக்கு சான்றாக இன்னொரு வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் தமிழ் சினிமா சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் பல்வேறு நடிகர்களும் கலைஞரின் நாடகங்கள், பாடல்கள், வசனங்களை பேசி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
பரசாக்தி சிவாஜியாக: அதில் எஸ்.ஜே. சூர்யா பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் நீதிமன்றத்தில் பேசும் சமூக நீதி வசனங்களை தனது ஸ்டைலில் பேசி நடித்திருப்பது சிவக்குமார், வடிவேலு உள்ளிட்டோரையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், என் தங்கை மட்டும் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால், கோடீஸ்வரன் வீட்டு பள்ளியறையிலேயே ஒருநாள்.. மானத்தை விலை கூறியிருந்தால் மாளிகைவாசியின் மடியிலேயே ஒருநாள்.. இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை.. இதைத்தான இந்த நீதிமன்றம் விரும்புகிறது.."
அதிலும் "பணம் பறிக்கும் கொள்ளை கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்" என்ற இடத்தில் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு தெறியாக அமைந்துள்ளது. இதன் மூலம் எஸ்.ஜே. சூர்யா மீண்டும் வித்தியாசமான தனது பக்கத்தை வெளிப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இன்னும் சிலர் அந்த வீடியோவுக்கு கீழ், எஸ்.ஜே. சூர்யாவை இப்படியான அரசியல் பேசும் கதாபாத்திரங்களிலும் நடிக்க வைக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் வியந்து பார்க்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications











