SJ Suryah: நடிகர் எஸ்.ஜே. சூர்யா எடுத்த முடிவால் ரசிகர்கள் அப்செட்.. மகிழ்ச்சியில் எஸ்.ஜே.எஸ்!
சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குநர்களாக கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்த இயக்குநர்கள் அவ்வப்போது படங்களில் நடித்து வந்தனர். ஆனால் தற்போது இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், பாரதிராஜா உள்ளிட்டோர் படங்கள் இயக்குவதை விட்டுவிட்டு முழுக்க முழுக்க நடிக்கத் தொடங்கியது மட்டும் இல்லாமல், நடிப்பிலும் புகழ் பெற்று வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் தற்போது மோஸ்ட் வாண்டட் ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய எஸ்.ஜே. சூர்யா, அதன் பின்னர் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என தொடர்ந்து சினிமாவில் பல்வேறு தளங்களில் கால் பதித்து அதில் பாராட்டையும் பெற்று வருகின்றார்.

கடந்த 1999ஆம் ஆண்டு தனது முதல் படமான வாலி படத்தில் அஜித்தை இரட்டை வேடங்களில் நடிக்கவைத்து, பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். அதன் பின்னர் விஜய்யை வைத்து குஷி என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மாபெரும் ஹிட் ஆனதால், இந்தப் படத்தையே தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் எடுத்தார். அதன் பின்னர் நியூ, நானி, அன்பே ஆருயிரே ஆகிய படங்களை இயக்கினார். 2010ஆம் ஆண்டு தெலுங்கில் புலி என்ற படத்தை இயக்கினார். அதன் பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் இவரே நடித்து இவரே இசை அமைத்த படம் இசை. அதன் பின்னர் எஸ்.ஜே. சூர்யா படத்தினை இயக்கவே இல்லை.

இறைவி: கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை கவனத்தில் வைத்து நடித்து வரும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் தற்போது இந்தியன் 2, ராயன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன. கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாக படங்கள் இயக்காமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக இறைவி படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதன் பின்னர் மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை, மெர்சல், ஸ்பைடர், மாநாடு, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் பெயர் பெற்றுக் கொடுத்தது. இதனாலே இவரை ரசிகர்கள் நடிப்பு அரக்கன் என அழைத்தனர்.

நடிப்பு அரக்கன்: நடிப்பு அரக்கன் என பெயர் பெற்றது மட்டும் இல்லாமல் அதனை தொடர்ந்து படத்திற்கு படம் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றார் எஸ்.ஜே. சூர்யா. வில்லனாக நடித்து அதில் கதாநாயகனை ஓவர்டேக் செய்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கும் நடிகராக வலம் வருகின்றார். தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் எஸ்.ஜே. சூர்யா எப்போது படங்களை இயக்குவார் என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தனர்.

கில்லர்: ஏற்கனவே இவர் கில்லர் என்ற படத்தை இயக்கப்போவதாக தெரிவித்தது மட்டும் இல்லாமல் இதுதொடர்பான தகவல்களும் வெளியாகியது. இந்நிலையில் தற்போது மீண்டும் அந்தப் படத்தை இயக்க எஸ்.ஜே. சூர்யா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது வரும் ஆகஸ்ட் மாதம் படத்தின் பூஜை போடப்பட்டு, அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கதாநாயகி தேர்வு: மேலும் படத்திற்கான கதாநாயகியைத் தேர்வு செய்யும் பணிகளிலும் எஸ்.ஜே. சூர்யா தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.ஜே சூர்யா தரப்பில் இருந்து துஷாரா விஜய் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











