குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்திருந்தோம்.. இரட்டை குழந்தைக்கு தந்தையான சினேகன் பேட்டி!
சென்னை: பாடலாசிரியர் சினேகன், கன்னிகா ஜோடிக்கு கடந்த வாரம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. இதனை தம்பதிகளாக தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தனர். இரட்டை பெண் குழந்தைக்கு பெற்றோராகி இருக்கும் இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்திருந்தோம் என பாடலாசிரியர் சினேகன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த பேட்டி தற்போது டிரெண்டாகி வருகிறது.
பிரபல பாடலாசிரியரான சினேகன் 'புத்தம் புது பூவே' என்ற படத்தில் முதல் முதலாக பாடலை எழுதினார். அதன் பிறகு பல படத்திற்கு பாடலை எழுதிய சினேகன், 2001ஆம் ஆண்டு வெளியான 'பாண்டவர் பூமி' படத்தில் எழுதிய பாடல் அவரை பிரபலமாக்கியது. அந்த படத்தில் வரும் அவரவர் வாழ்க்கையில், தோழா தோழா ஆகிய பாடல்கள் இன்று வரை அனைவருக்கும் பிடித்தமான பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பாடல்களை எழுதி திரைக்கு பின்னால் இருந்த சினேகன், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்.

பாடல் ஆசிரியர் சினேகன்: இதனைத்தொடர்ந்து கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதிலும், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை, விருகம்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டார். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக தனது மனைவி கன்னிகாவுடன் சேர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
7 ஆண்டு காதல்: கடந்த 2021ஆம் ஆண்டு சினேகன் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். சீரியல் நடிகையான கன்னிகா ரவியும் சினேகனும் 7 ஆண்டுகளாக காதலித்த போதும் அது யாருக்கும் தெரியாத நிலையில், திடீரென காதலை அறிவித்து கமல், தாலி எடுத்து கொடுக்க அவர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன போதும், குழந்தை இல்லை என கேட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் கன்னிகா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தனர்.

இரட்டை பெண் குழந்தை: இதையடுத்து, சினேகன், கன்னிகா தம்பதிகளுக்கு கடந்த வாரம் ஜனவரி 25ந் தேதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனை தம்பதிகளாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளனர். சினேகன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற " என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது. தாயே எந்தன் மகளாகவும், மகளே எந்தன் தாயாக பிறந்து இருப்பதாக மகிழ்ச்சியான தகவல் பகிர்ந்து இருந்தார். அனைவரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

குழந்தை வேண்டாம்: இந்நிலையில், பாடகர் சினேகன் அளித்து இருக்கும் பேட்டியில், கல்யாணம் செய்து கொண்டதும், நாங்கள் முதலில் மூணு வருஷத்துக்கு குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்து வைத்திருந்தோம். ஏனென்றால், நாங்கள் 7 வருடமாக காதலித்தோம், நாங்கள் காதலித்த நாட்களில் வெளியில் சென்றது இல்லை, இருவரும் சந்தித்து பேசிக்கொண்டது இல்லை. இதனால் தான், எங்களின் காதல் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இருந்தது. இதனால் திருமணமாகி இரண்டு வருடம் ஜாலியாக எங்கே எல்லாம் போக வேண்டும் என்று ஆசைபட்டோமோ அங்கே எல்லாம் போகலாம் என்று முடிவு செய்தோம். கன்னிகாவிற்கு மலைப் பிரதேசங்களும், குளிர் பிரதேசங்களும் ரொம்ப பிடிக்கும் என்பதற்காக அது போன்ற இடத்தை தேர்வு செய்து செல்வோம் என சினேகன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











