கமலஹாசனின் கன்னி பேச்சு.. சிறு ஏமாற்றம் தலைவரே.. மனம் விட்டு பேசிய சினேகன்!
சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான நடிகர் கமல்ஹாசன் கன்னி உரையை ஆற்றினார். அதில், தமிழரை பார்த்து என்ன சொல்கிறீர்கள்? தமிழ் பிச்சை எடுக்க உதவாதா? தமிழ் பிச்சை எடுக்க உதவாது. திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான். அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும், நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கவே மாட்டான் என அதிரடியாக பேசி இருந்தார்.
இதுகுறித்து, பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளருமான சினேகன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நாடாளுமன்றத்தில் உங்களின் பேச்சைக் கேட்ட நொடியில் இருந்து வியப்பில் ஆழ்ந்து கிடக்கிறேன். நான் மட்டுமல்ல என்னைப்போல லட்சோப லட்சம் மக்களும் வியந்தும், புகழ்ந்தும் கொண்டு இருக்கிறார்கள். எங்கிருந்து பேசினால், இந்த உலகத்தின் காதில் விழுமோ, அங்கிருந்து பேசி இருக்கிறீர்கள். இந்தியா மட்டுமல்ல இந்தியர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கே எல்லாம் ஓங்கி ஒலித்து இருக்கிறது, உங்களுடைய இந்த ஆளுமை மிக்க உரை.

வீரியம் மிக்க உரை: என்ன ஒரு சிறு ஏமாற்றம், நீங்கள் ஆற்றிய அந்தத் தமிழ் உரையில் இருக்கின்ற வீரியம், ஆங்கில உரையிலும் இருக்கிறது என்பதை உணர முடிந்தாலும் முழுமையாக, தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு, பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலமாக அதை மொழிபெயர்க்க தொடங்கினேன், google Translate தொடங்கி AI தொழில் நுட்பம் வரை முயற்சி செய்து பார்த்தேன். ஒவ்வொரு ஒவ்வொரு கருத்தை, ஒவ்வொரு முறையும் வேறு வேறு விதமாக வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது. இதனால், தொழில் நுட்பத்தின் மீது உள்ள நம்பிக்கை குறைந்துவிட்டது. ஆனால், அதே நேரம் நீங்கள் உங்கள் வாய் மொழியால், நம் தாய் மொழியால் ஆற்றிய அந்த ஆளுமை மிக்க உரையை மொழிபெயர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
வாருங்கள் தலைவரே: உடனடியாக புறப்பட்டு வாருங்கள், ஆளுமை மிக்க உரை மாற்றத்திற்கான உரையை, நீங்கள் மொழிமாற்றம் செய்து தர வேண்டும். அதை முன் கலவீரனாக நான் நின்று கடை கோடி தமிழனுக்கும் சென்று சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் மட்டுமல்ல எல்லோரும் இதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் வாருங்கள் அண்ணா, வாருங்கள் தலைவரே, உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் உங்கள் வாய் மொழியால் நம் தாய்மொழி, நம் மாற்றத்திற்கான விடியளை கேட்கும் என்று சினேகன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











