அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.. குறுந்தொகை பாடலுடன் நிச்சயதார்த்த ஃபோட்டோக்களை ஷேர் செய்த சோபிதா!
ஹைதராபாத்: இணையத்திற்குள் நுழைந்தாலே டன் கணக்கில் கொட்டும் செய்தியாக இருப்பது நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் நிச்சயத்தார்த்த செய்திகளாக இருக்கின்றது. சோபிதா துலிபாலாவுக்கு இது முதல் திருமணம், ஆனால் நாக சைதன்யாவுக்கோ இது இரண்டாவது திருமணம். இவர் ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்தார். அதன் பின்னர் 2021ஆம் ஆண்டில் இவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இப்படியான நிலையில், நாக சைதன்யா 2022ஆம் ஆண்டில் இருந்து சோபிதாவுடன் டேட் செய்து வருவதாக தகவல்கள் கசிந்தது.
அதையடுத்து இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் என பேசப்பட்டது. அதேபோல் ஆகஸ்ட் 8ஆம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில், நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்து, இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

டோலிவுட் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமா வட்டாரங்களில் இவர்களது நிச்சயதார்த்த பேச்சுகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சோபிதா துலிபாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நிச்சயதார்த்தத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து அதில் குறுந்தொகை பாடலை கேப்ஷனாக இட்டுள்ளார். அதாவது குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான காதலர்களால் என்றைக்கும் கொண்டாடப்படுகின்ற பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பகிர்ந்துள்ளார்.

குறுந்தொகை: சோபிதா பகிர்ந்துள்ள குறுந்தொகை பாடல், " யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" என்ற பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பகிர்ந்துள்ளார்.

மாடல்: ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட துலிபாலா, கடந்த 2013ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் பட்டத்தை வென்றார். மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்த சோபிதா துலிபாலா அதன் பின்னர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். ராமன் ராகவ் 2.o என்ற இந்தி படத்தில் நடித்து, திரை உலகில் அறிமுகமானார். 2016ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நவசுதீன் சித்திக் உடன் நடித்தார்.
வானதி: இந்தி திரைப்படத்தில் இருந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி இருந்தாலும், தென்னிந்திய சினிமாக்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார். குறிப்பாக தெலுங்கு, தமிழ், மலையாள மொழிப் படங்களிலும் நடித்து வருகின்றார். தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் நடித்த முதல் தமிழ் படம் இதுதான். படங்கள் மட்டும் இல்லாமல் வெப் சீரீஸ்களிலும் சோபிதா துலிபாலா நடித்து வருகின்றார்.


Click it and Unblock the Notifications











