Solgar Thotti Novel Author - வெற்றிமாறன் அறம் இழந்திருக்க கூடாது - சோளகர் தொட்டி நாவல் ஆசிரியர் காட்டம்
சென்னை: Solgar Thotti Novel Author on Viduthlai (சோளகர் தொட்டி நாவல் ஆசிரியர்)விடுதலை படத்தில் சோளகர் தொட்டி நாவலில் இருந்து காட்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கும் சூழலில் அதுகுறித்து நாவல் ஆசிரியர் பாலமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் விடுதலை. இப்படம் கடந்த 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

சோளகர் தொட்டி நாவலில் இருந்து காட்சிகள்?
விடுதலை படமானது மலை வாழ் மக்களை காவல் துறையினர் எவ்வளவு கொடுமைப்படுத்துகிறார்கள் உள்ளிட்ட விவகாரங்களை பேசியிருக்கிறது. இது ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றாலும்; படத்தின் பல காட்சிகள் சோளகர் தொட்டி நாவலில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்க்ள் எழுந்துள்ளன.

சோளகர் தொட்டி நாவல்
வழக்கறிஞர் பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி நாவலானது வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது வனத்துறையினர் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு நிகழ்த்திய உச்சக்கட்ட வன்முறையை பேசியிருந்தது. விடுதலை படத்தின் காட்சிகளும் இதோடு ஒத்துபோவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கும் சூழலில் நாவல் ஆசிரியர் பாலமுருகன் இதுகுறித்து மௌனம் கலைத்துள்ளார்.

பாலமுருகன் சொல்வது என்ன?
இதுகுறித்து அவர் கொடுத்திருக்கும் விளக்கத்தில், "வெற்றி மாறனின் விடுதலை திரைப்படத்தின் முன் வெளியீட்டு காட்சிகள் கடந்த மாதம் வந்த போது நண்பர் ஒருவர் வனம் சார்ந்த பின்னனி மற்றும் ஒரு காவலர் பார்வையில் கதை நகர்தல் என அறிந்து, சோளகர் தொட்டி நாவலின் காட்சிகள் இருக்குமோ? என ஐயம் தெரிவித்தார். ஆனால் நான் வெற்றிமாறன் என்ற இயக்குநரை நேரில் அறிந்ததில்லை என்றபோதும், தொடர்ந்து நாவல்களின் மைய கதையை திரைப்படமாக்கும் இயக்குநராகவும், இலக்கியத்தின் மீது ஆர்வம் உள்ளவராகவும் இருப்பதாலும் சோளகர் தொட்டி தாக்கம் இருக்காது என உறுதியாக கருதினேன்.

அந்த எண்ணம் எனக்கும் எழுந்தது
திரைப்படம் வெளிவந்த தினத்திலிருந்து பல்வேறு நண்பர்கள் சோளகர் தொட்டி நாவலின் பல காட்சிகள் இப்படத்தில் உள்ளதாக குறிப்பிட்டனர். நான் திரைப்படத்தை நேற்று பார்த்தேன். திரைப்படமானது பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பான ஒரு வெற்றி படத்திற்கான அனுபவத்தோடு சில அரசியல் விடயங்களையும், சில குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழ்வதாகவும் செல்கின்றது. திரைப்படத்தின் மையக் கருவும், கதைக்களமும், பாத்திரங்களும் சோளகர் தொட்டியின் பின்புல நீட்சியாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பாத்திரங்களாகவும் நாவலை வாசித்த பலருக்கும் வருவது போன்ற எண்ணம் எனக்கும் எழுந்தது.

சோளகர் தொட்டியின் நீட்சி வடிவம்
குறிப்பாக இத்திரைப்படத்தின் துவக்க காட்சியான இரயில் வெடிப்பும், இறுதி காட்சியான பெருமாள் என்ற மனிதரை பிடிக்கும் காட்சியையும் எடுத்து விட்டால் கதையின் களம் மலைப் பகுதி, பழங்குடி கிராமம் மேலும் அது தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடைபெறும் பகுதி. காவல்துறையின் விசாரனை முகாமான "ஒர்க் ஷாப்" வதை முகாம். அங்கு பணி புரியும் ஒரு காவல்துறையில் மனித நேயம் உள்ள ஒரு காவலர். சோளகர் தொட்டி நாவலில் இந்த காவலருக்கு பெயர் சுபாஷ்.
கையறு நிலையில் மனித நேயத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் குணம் கொண்ட மனிதன். அது மட்டுமல்ல மல்லி என்ற இளம் பெண்ணை முகாமிலிருந்து மீட்டு உயிருடன் ஜீப்பில் கொண்டு போய் அவள் வீட்டில் சேர்க்கும் மனிதன். வதைகளுடன் மக்கள் வாடும்போது ஏதோ ஒரு வகையில் ஆறுதலாய் நிற்கும் ஒரு போலீஸ்காரன். இந்த பாத்திரத்தின் நீட்சி மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட வடிவமாக இத்திரைப்படத்தின் நாயகன் நிற்கின்றான்.

களம் சோளகர் தொட்டி தாக்கம்தான்
திரைப்படத்தின் வதை முகாம் காட்சிகள் கை நகங்களை வெட்டுதலில் தொடங்கி ஒரு பெண்ணிடம் அவளின் மாமனாரின் இருப்பிடம் கேட்டு துன்புறுத்துதல், அப்பெண்ணின் குழந்தையை கொன்றுவிடுதல், வதை முகாமின் வதைகள் என சோளகர் தொட்டியின் உள்ளடகத்திலிருந்து கையாளப்பட்டுள்ளதாக கருத முடிகின்றது. வீரப்பனுக்கு பதிலாக வாத்தியார் என்ற பாத்திரங்களை கூறினாலும் கதையின் களம் சோளகர் தொட்டியின் தாக்கத்தில் இருக்கின்றன.

வெற்றிமாறன் அறத்தை இழந்திருக்க வேண்டாம்
வெற்றிமாறன் போன்ற இயக்குநர் பல இளம் தலை முறை படைப்பாளருக்கு முன்னுதாரணமாக இருப்பவர். அவர் ஒரு படைப்பை அணுகும்போது அறிவு நாணயத்தோடு அணுகியிருக்க வேண்டும். ஒரு உண்மையை திரித்து கூறுவது, நிகழ்வுகளை தவறான வரலாற்றுடன் இணைப்பது, மற்றவரின் படைப்பை சில மாற்றங்கள் செய்து தனது படைப்பாக காட்டுவது என படைப்பு அறம் சார்ந்த நேர்மையை அவர் இழந்திருக்க வேண்டியதில்லை.

பழங்குடிகளின் வாழ்க்கையையும் பேசியிருக்கலாம்
வீரப்பன் தேடுதல் வேட்டையில் பதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட பழங்குடி மற்று இதர மலையோர கிராம மக்களின் குரலை வெளிப்படைத்தன்மையோடு உலகளாவிய அளவில் மனித நேயத்துடன் கொண்டு சென்றிருக்க முடியும். வன்முறைகள் மட்டும் காட்சிப்படுத்தப்பட்ட இடத்தில் பழங்குடி வாழ்க்கையும், நேயமும் அழிக்கப்பட்ட அம்மக்களின் வாழ்வையும் கூடுதலாக பேசியிருக்க முடியும். படைப்பு சார்ந்த அறம் வீழ்ச்சி அடைந்திருக்காது" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











