'அப்ப நாங்கனாப்ள யாராம்..?' - க்ளிஷேவில் சளைக்காத தமிழ் சினிமா
'அப்ப நாங்கனாப்ள யாராம்..?' - க்ளிஷேவில் சளைக்காத தமிழ் சினிமா
ஹாலிவுட் திகில் படங்கள் எல்லாத்துலயும் நம்மளை பயமுறுத்துறதுக்காக சில கேரக்டர்களை உலாவ விட்ருப்பாய்ங்க. கொடூரமான உருவம் ஒண்ணு கண் முன்னாடி வந்து 'சடார்'னு நின்னு பயமுறுத்துறது, யார் கழுத்துலயாவது 'சதக்' 'சதக்'னு கத்தியைச் சொருகுறது மாதிரி வன்முறைக் காட்சிகள் நிறையவே இருக்கும். தமிழ் சினிமா மட்டும் என்ன தக்காளித்தொக்கா? இதைவிட பயங்கரமான காட்சிகளையெல்லாம் சாதாரண படத்துலேயே பார்த்துப் பார்த்துக் களைச்சவிங்கப்பூ நாங்க...
தான் வளர்க்கும் நாய், பூனை, குரங்கு என எதையாச்சும் வில்லன் கொன்றுவிட்டால் அதற்காகவே அவனை வருசக்கணக்கில் ப்ளான் போட்டு அட்டாக் செய்யும் யுத்திகள் எல்லாம் அந்தக் காலத்திலேயே நம் ஊர் சினிமாவில் உண்டு. ப்ளூ கிராஸுக்கே ரோல் மாடல்யா நாங்க!

புரிஞ்சிடுச்சா... தெரிஞ்சிடுச்சா..! :
நாயகன் ரொம்ப சாந்தமானவர்னு நினைச்சுகிட்டு இருந்த நாயகி, ஒரு மழைநாள் ராத்திரியில் நாயகன் எங்கேயோ போறதைப் பார்த்து ஃபாலோ பண்ணுவாங்க. அவர் அப்பாவி டு அடப்பாவி ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆகி, பெரிய அட்டெம்ப்டை அசால்ட்டா முடிச்சுட்டு மூக்கில் ரத்தத்தோடு வந்துக்கிட்டு இருப்பார். அதைப் பார்த்து மிரண்டுபோன ஹீரோயின் மயங்கி விழுந்து நம்மளையும் பயமுறுத்தும். அதுக்கு அவரே பரவாயில்லையேம்மா!

சமையல்ல இருக்கு சென்டிமென்ட்டு :
ஹீரோவுக்கே தெரியாமல் அவரது வீட்டிற்குள் நுழைந்த கதாநாயகி, அடுப்படிக்குச் சென்று சமைத்து வைக்க, அதனை ஹீரோவின் அம்மாவோ, பாட்டியோ பரிமாறியபிறகு ‘சாப்பாடு பிரமாதம், இதை சமைச்ச கைக்கு தங்க வளையல்தான் போடணும்'னு கதாநாயகன் புகழ, அப்போ உண்மையைப் போட்டு உடைப்பார்கள். அதனைக் கதாநாயகி மறைந்திருந்து கவனித்துப் பூரித்துப்போய், அங்கிருந்து டூயட் தொடங்கும். அடங்கப்பா!

எல்லாம் என் நேரம்! :
ஹீரோவின் அப்பாவையோ, அம்மாவையோ வில்லன் கும்பலைச் சேர்ந்த ஆட்கள் சரமாரியாகத் தாக்கிவிட்டுப் போய்விடுவார்கள். அவர்கள் குத்துயிரும், குலையுயிருமாக துடித்தபடி கிடக்கும் காட்சியில் அன்று மட்டும் ஹீரோ சாவகாசமாக வறுத்தகடலை வாங்கித் தின்றுவிட்டு லேட்டாக வருவார். பார்த்ததும் பதறிப்போய் ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிப்போகாமல் மடியில் போட்டு ஹீரோ அழும்போது அவரது அம்மா/அப்பா ஏதோ சொல்லவருவார். அதற்குள் தலை தொங்கி உயிர் போய்விடும். ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போடா பரதேசினு சொல்ல வந்திருப்பாங்களோ?

அம்மான்னா சும்மா இல்லடா! :
ஹீரோ எவ்வளவு பெரிய தறுதலையாக இருந்தாலும் சரி. ஊரே காறித் துப்பினாலும், அப்பா தினமும் தண்டச்சோறு எனக் கரித்துக்கொட்டினாலும் ஹீரோவின் அம்மா மட்டும் யாருக்கும் தெரியாமல் நிறைய சோறுபோட்டு அழுதுகொண்டே ஊட்டி விடுவார்.
ஹீரோ எவ்வளவு பெரிய அப்பாவிக் கைப்புள்ளையாக இருந்தாலும் சரி. தன் குடும்பத்தில் ஒருவரையோ அல்லது காதலியையோ யாராவது வம்பிழுத்தால், கைகளில் நாக்குப்பூச்சி தெறிக்க வில்லன்களை வெறித்தனமாக அடித்து நொறுக்கி தக்காளிச் சட்னியைப் பார்க்காமல் விட மாட்டார். இதையே எத்தனை படத்துக்குத்தான்..?


Click it and Unblock the Notifications