'உரிமைக்கு குரல் கொடுக்கும் சக மனிதர்கள்..' அக்ஷய் குமார், அஜய் தேவ்கனை சாடிய ரஜினி பட ஹீரோயின்!
மும்பை: விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாட்டுப் பிரபலங்கள் தெரிவித்துள்ள கருத்துகளை ஆதரித்துள்ளார் ரஜினி பட நாயகியான சோனாக்ஷி சின்ஹா.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு அவர்களுக்கு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இருந்தும் சுமூகமான முடிவு எடுக்கப்படவில்லை.

டிராக்டர் பேரணி
குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது நடந்த வன்முறை தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதற்கிடையே விவசாயிகள் தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை நாளை நடத்த இருக்கின்றனர்.

ஆதரவும் எதிர்ப்பும்
அதையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு அதிக அளவில் விவசாயிகள் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பாப் பாடகி ரிஹானா
இந்நிலையில், அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, மியா கலீஃபா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறவினர் மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பலர் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இதன்மூலம் இந்திய விவசாயிகளின் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

உலக அளவில்
அமெரிக்கா பாப் பாடகி ரிஹானா, தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த போராட்டம் பற்றிய செய்தி லிங்க்கை பகிர்ந்து 'ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?'என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பதிவு பெரும் வைரலானது. உலக அளவில் ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்துள்ளது.

அக்ஷய் குமார்
இதையடுத்து நடிகர்கள் அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் மற்றும் கிரிக்கெட் வீரர்கள், சச்சின் டெண்டுல்கர், ரெய்னா உள்ளிட்ட பிரபலங்கள் #IndiaTogether, #IndiaAgainstPropaganda என்ற ஹேஷ்டேக்குகள் மூலம் இந்தியர்களின் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வெளிநாட்டினர் இதில் தலையிட வேண்டாம் என்று பதிவிட்டனர்.

மாறக் கூடாது
இதையடுத்து நடிகை டாப்ஸி தனது ட்விட்டரில், ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையை குலைப்பதாகவும் ஒரு ஜோக் உங்கள் நம்பிக்கையை பாதிப்பதாகவும் ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை பாதிப்பதாகவும் நினைத்தால், நீங்கள் தான் உங்கள் மதிப்பை வலுப்படுத்த வேண்டும். அதைவிட்டு விட்டு அடுத்தவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களாக மாறக்கூடாது என்று பதிவிட்டார்.

சோனாக்ஷி சின்ஹா
இந்நிலையில் நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் நடிகர்கள் அக்ஷய் குமார், அஜய்தேவ்கனை சாடியுள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள வெளிநாட்டு பிரபலங்களுக்கு ஆதரவாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இணையம் தடை செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் தாக்கப்படுகிறார்கள்.

உரிமை குரல்
வெறுப்பு பேச்சு அதிகரித்து வருகிறது. இதுதான் உலக அளவில் இந்த பிரச்னை கவனிக்கப்பட காரணம். நம் நாட்டின் பிரச்னையில் வெளிநாட்டு சக்திகள் தலையிட நினைப்பதாக இதைக் கருத வேண்டாம். மற்ற மனிதர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் சக மனிதர்கள்தான் அவர்கள் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











