பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்… திரையுலகம் அதிர்ச்சி !
சென்னை : பாடலாசிரியர் பிறைசூடன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 65.
தமிழ் சினிமாவில் 1500க்கும் அதிகமான பாடல்களையும், ஐயாயிரத்திற்கும் அதிகமான பக்தி பாடல்களையும் எழுதியுள்ளார்.
1996ம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை தாயகம் திரைப்பட பாடலுக்காக பெற்றார்.

சிறை படத்தில்
1984ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனால் சிறை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் பிறைசூடன்.

சிறந்த பாடலாசிரியர் விருது
இதையடுத்த என்ன பொம்முகுட்டி அம்மாவுக்கு, என்ன பெத்த ராசா, என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான், கேளடி கண்மணி போன்ற திரைப்படங்களுக்கு பாடல் எழுதி உள்ளார். என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் இடம் பிடித்த சோலப் பசுங்கிளியே... என்ற பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை வென்றார் பிறைசூடன். அதே போல தாயகம் திரைப்படப் பாடலுக்காக விருதை பெற்றார்.

பல விருதுகள்
கலைச்செல்வம் விருது, கபிலர் விருது, சிறந்த பாடலாசிரியருக்கான விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார். விஜயகாந்தின் நூறாவது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆட்டமா தேரோட்டமா' பாடல் வர்த்தக ரீதியில் புகழ்பெற்ற பாடலாசிரியராக பிறைசூடனை அடையாளம் காட்டியது.

காலமானார்
இந்நிலையில், திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நலம் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென சிகிச்சை பலனின்றி சற்றுமுன் காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு திரையுலகினருக்கு பேரதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதயமே இதயமே
முரளி நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இதயம் திரைப்படத்தில் இடம்பெற்ற இதயமே இதயமே என்ற பாடலை எழுதியவர் பிறைசூடன். காலத்தால் அழிக்க முடியாத பாடல்களாய் இன்னும் தமிழ் ரசிகர்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

கடைசிபாடல்
பக்தி பாடல்களை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட பாடலாசிரியர் பிறைசூடன், கடைசியாக ஜெயிக்கிற குதிரை என்ற திரைப்படத்திற்கு 2017 ஆம் ஆண்டு பாடல்கள் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications











