Sonia Agarwal: “செல்வராகவன் அப்படியானவர்... இனி அவரை பார்க்க மாட்டேன்..” சோனியா அகர்வால் ஓபன்!
சென்னை: செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சோனியா அகர்வால்.
செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை படங்களிலும் சோனியா அகர்வால் நாயகியாக நடித்திருந்தார்.
இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் 2010ல் விவாகரத்துப் பெற்று பிரிந்தனர்.
தற்போது இதுகுறித்து பேசியுள்ள சோனியா அகர்வால், செல்வராகவன் பற்றி காட்டமாக விமர்சித்துள்ளது வைரலாகி வருகிறது.

செல்வராகவனை இனி பார்க்கவே மாட்டேன்: தமிழில் மிக முக்கியமான இயக்குநர்களில் செல்வராகவனும் ஒருவரும். துள்ளுவதோ இளமை படம் மூலம் தம்பி தனுஷ் நடிகராகவும், அண்ணன் செல்வராகவன் இயக்குநராகவும் அறிமுகமாகினர். இவர்கள் கூட்டணியில் துள்ளுவதோ இளமையை தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் படங்களும் வெளியாகின.
இவர்களின் கூட்டணியில் வெளியான காதல் கொண்டேன் படத்தில் நாயகியாக நடித்தவர் சோனியா அகர்வால். தமிழில் இதுதான் அவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தமிழில் நடித்து வந்த சோனியா அகர்வால், செல்வராகவன் படங்களின் ஆஸ்தான நாயகியாகவும் வலம் வந்தார். செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை படங்களும் சோனியா அகர்வாலுக்கு நல்ல அறிமுகம் கொடுத்தது.
படப்பிடிப்புகளின் போது நெருங்கி பழகிய செல்வராகவனும் சோனியா அகர்வாலும் ஒருகட்டத்தில் காதலிக்கத் தொடங்கினர். புதுப்பேட்டை திரைப்படம் வெளியான 2006ம் ஆண்டில், அவர்களுக்கு திருமணமும் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தத் திருமணத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்தினர். செல்வராகவன், சோனியா அகர்வால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை என சொல்லப்படுகிறது.
இதனையடுத்து இருவரும் 2010ம் ஆண்டு விவாகரத்துப் பெற்று பிரிந்தனர். அப்போது இவர்களது விவாகரத்து குறித்து மேலும் பல வதந்திகளும் பரவின. சோனியா அகர்வாலை பிரிந்த அடுத்த ஆண்டிலேயே கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்துகொண்டார் செல்வராகவன். ஆனால், சோனியா அகர்வாலோ இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். அதேநேரம் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் சோனியா அகர்வால்.
இந்நிலையில், செல்வராகவன் குறித்து சோனியா அகர்வால் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, "இயக்குநர் செல்வராகவன் முரட்டுப் பிடிவாதம் கொண்டவர். கணவன், மனைவியாக இருந்து பிரிந்தவர்கள் நண்பர்களாக தொடர்வது முடியாத காரியம். காதல் செத்துப்போன பின்னர் சினேகிதராக பார்க்க முடியாது. இனி என் வாழ்க்கையில் செல்வராகவன் முகத்தை பார்க்கவே மாட்டேன்" என அதிரடியாகக் கூறியுள்ளார்.
செல்வராகவன் குறித்து அவரது முதல் மனைவி இவ்வாறு கூறியது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் சோனியா அகர்வால் இப்படி கூறியதற்கான காரணம், அதன் பின்னணி குறித்து எதுவும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











