மும்பையில் சிக்கிய 180 தமிழர்கள்..சொந்த ஊர் செல்ல உதவிய சோனு சூட்..ஆரத்தி எடுத்து வாழ்த்திய பெண்கள்
சென்னை: மும்பையில் சிக்கிய சுமார் 180 தமிழர்கள் சொந்த ஊருக்குச் செல்ல, பிரபல நடிகர் சோனு சூட் உதவி உள்ளார்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மார்ச் மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இருந்தும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இந்த தொற்று இந்தியா முழுவதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

மருத்துவர்கள்
அதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் முயற்சிகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில் பிரபல நடிகர் சோனு சூட், கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களைக் காப்பாற்ற பாடுபடும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஓய்வெடுக்க, தனது ஓட்டலை கொடுத்திருந்தார். பின்னர் 45 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தினமும் உணவு கொடுத்து வந்தார்.

தொழிலாளர்கள்
இந்நிலையில் கொரோனாவால் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் சிக்கி தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களை, தனது சொந்த செலவில் விமானம் மற்றும் பேருந்து மூலம் அனுப்பி வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, இந்த இக்கட்டானச் சூழலில், ஏசி அறையில் அமர்ந்தபடி ட்வீட் போட்டுக்கொண்டிருந்தால் எதுவும் நடக்காது என்பதால் களத்தில் இறங்கினேன் என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து உதவி
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர். அவரை சூப்பர்மேனாக சித்திரித்தும் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். மகாராஷ்டிர மாநில ஆளுநரும் அவரை சந்தித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். சோனு சூட்டின் இந்த உதவியை அறிந்த பலரும் தங்களின் சூழ்நிலையை எடுத்துக்கூறி ட்விட்டரில் தொடர்ந்து உதவி கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு மறுக்காமல் உதவி வருகிறார்.

கோலிவாடா
இந் நிலையில் மும்பையில் உள்ள சயான் கோலிவாடா பகுதியில் சிக்கிய தமிழர்கள், சொந்த ஊர் திரும்ப உதவி செய்யுமாறு நடிகர் சோனு சூட் அலுவலகத்தில் கோரிக்கை வைத்தனர். இதை அறிந்த அவர், 180 தமிழர்களை விமானம் மூலம் அனுப்பி வைக்க முயற்சி செய்தார். ஆனால், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பேருந்து மூலம் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தேங்காய் உடைத்து
முதல் பேருந்து வடலா டி.டி. பகுதியில் இருந்து நேற்று புறப்பட்டது. நடிகர் சோனு சூட் தேங்காய் உடைத்து அதை அனுப்பி வைத்தார். தங்களுக்கு உதவி செய்த சோனு சூட்டிற்கு தமிழ் பெண்கள் ஆரத்தி எடுத்து நன்றி கூறினர். அவர்களிடம் பத்திரமாக ஊருக்கு சென்று வாருங்கள் என்று அவர் கூறினார்.
Recommended Video

கள்ளழகர்
நடிகர் சோனு சூட், விஜயகாந்தின் கள்ளழகர் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து, மஜ்னு, சந்திரமுகி, அருந்ததி, ஒஸ்தி, தேவி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழ் தவிர, தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் இந்த லாக்டவுனில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலருக்கு தொடர்ந்து உதவி செய்துவருகிறார்.


Click it and Unblock the Notifications











