இலக்குகள் இருக்கு.. என் பயோபிக் எடுக்கப்பட்டால் நான் வைக்கும் ஒரே கண்டிஷன் இதுதான்.. சோனு சூட்!
மும்பை: தன்னைப் பற்றிய பயோபிக் எடுக்கப்பட்டால், இந்த ஒரு கண்டிஷனை மட்டுமே வைக்கிறேன் என்று நடிகர் சோனு சூட் கூறியுள்ளார்.
கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு உதவியவர் நடிகர் சோனு சூட்.
தனது சொந்த பணத்தில், பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்டவர்களை பஸ்கள், ரயில், விமானம் மூலம் அனுப்பி வைத்தார்.

ரியல் ஹீரோ
வெளிநாட்டில் சிக்கிய மாணவர்களையும் விமானம் மூலம் அழைத்து வர உதவி செய்துள்ளார். இதையடுத்து அவரது செயலை இந்தியாவில் உள்ள அனைவரும் பாராட்டி வருகின்றனர். படங்களில் வில்லனாக நடித்தாலும் நீங்கள்தான் ரியல் ஹீரோ என்றும் உங்கள் மனது பெரிது என்றும் கூறுகின்றனர்.

ஏராளமான அழைப்பு
இதற்கிடையே, உதவிகேட்டு இப்போதும் தனக்கு ஏராளமான அழைப்பு வந்து கொண்டிருப்பதாக சமீபத்தில் கூறியிருந்தார். அவர் தொடர்ந்து கஷ்டப்படுபவர்களுக்கு உதவி வருகிறார். வேலை வாய்ப்புகளுக்கும் ஏற்பாடு செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், நெட்டிசன்களின் கேள்விக்கு பதிலளித்தும் உதவி செய்தும் வருகிறார்.

வில்லத்தன நடிப்பு
சோனு சூட், விஜயகாந்தின் கள்ளழகர் மூலம் நடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து, மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அனுஷ்காவின் அருந்ததி படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு பேசப்பட்டது. இந்தி மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ள இவர், இப்போது விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் நடித்துள்ளார்.

இப்போதே பயோபிக்
தற்போது பிரபலங்களின் பயோபிக் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடிகர் சோனு சூட் பற்றியும் படம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி நடிகர் சோனு சூட்டிடம் கேட்டபோது, கூறியதாவது: என்னைப் பற்றி இப்போதே பயோபிக் எடுப்பது சரியானதல்ல. இன்னும் காலங்கள் இருக்கிறது. நான் பல விஷயங்களைச் சாதிக்க வேண்டும்.

கண்டிஷன் இதுதான்
நான் அடைவதற்கான இலக்குகள் இன்னும் இருக்கின்றன. அப்படியே என் பயோபிக் எடுக்கப்பட இருந்தால், அதில் நானே நடிப்பேன். அதற்கான உரிமையை நான் பெற்றிருப்பதாக நினைக்கிறேன். என் பயோபிக்கிற்கு நான் வைக்கும் ஒரே கண்டிஷன் இதுதான். இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











