கொரோனா கால ஹீரோ.. சம்பளத்தை 2 மடங்கு உயர்த்தினாரா பிரபல நடிகர்.. தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!
சென்னை: நடிகர் சோனு சூட் தனது சம்பளத்தை அப்படியே இரண்டு மடங்கு உயர்த்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு உதவியவர் நடிகர் சோனு சூட்.
தனது சொந்த பணத்தில், பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்டவர்களை பஸ்கள், ரயில், விமானம் மூலம் அனுப்பி வைத்தார்.

வில்லனாக நடித்தாலும்
வெளிநாட்டில் சிக்கிய மாணவர்களையும் விமானம் மூலம் அழைத்து வர உதவி செய்துள்ளார். இதையடுத்து அவரது செயலை இந்தியாவில் உள்ள அனைவரும் பாராட்டி வருகின்றனர். படங்களில் வில்லனாக நடித்தாலும் நீங்கள்தான் ரியல் ஹீரோ என்றும் கொரோனா கால ஹீரோ என்றும் உங்கள் மனது பெரிது என்றும் கூறுகின்றனர்.

தொடர்ந்து உதவி
இதற்கிடையே, உதவிகேட்டு இப்போதும் தனக்கு ஏராளமான அழைப்பு வந்து கொண்டிருப்பதாக சமீபத்தில் கூறியிருந்தார். வேலை வாய்ப்புகளுக்கும் ஏற்பாடு செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், நெட்டிசன்களின் கேள்விக்கு பதிலளித்தும் உதவிகள் செய்தும் வருகிறார்.

அல்லுடு அதுர்ஸ்
அவருக்கான பாராட்டு மழை தொடர்கிறது. இந்நிலையில் லாக்டவுன் தளர்வுக்குப் பிறகு தெலுங்கு படப்பிடிப்பில் கலந்துகொண்டார். பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீனிவாஸ் நடிக்கும் அல்லுடு அதுர்ஸ் என்ற படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட அவருக்கு படக்குழு சார்பில் சால்வை அணிவித்து பாராட்டினார்.

டபுள் மடங்கு சம்பளம்
இந்நிலையில், அவரை சில தெலுங்கு தயாரிப்பாளர்கள், தங்கள் படங்களில் நடிக்க வைப்பதற்காக சந்தித்துள்ளனர். அவர், ரூ.3.5 கோடியில் இருந்து ரூ.4 கோடி வரை சம்பளம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் வாங்கியதை விட டபுள் மடங்கு கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில் இருந்து குறைக்க மறுத்துவிட்டதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர்.

தமிழரசன்
சோனு சூட், விஜயகாந்தின் கள்ளழகர் மூலம் நடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து, மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அனுஷ்காவின் அருந்ததி படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு பேசப்பட்டது. இந்தி மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ள இவர், இப்போது விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











