வீதிக்கு வந்த சொத்து பஞ்சாயத்து.. ரௌடிகளை வைத்து மிரட்டுகிறார்கள்.. ஸ்டார் நடிகர் மகன் மீது புகார்!
சென்னை: நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இன்றைய தலைமுறைக்கும் தெரிந்த முகமாக மாறிய பிரபல நடிகர் ஒருவர் தனது மகன், ஆட்களை வைத்து தன்னை மிரட்டுவதாகவும், தனது வீட்டை அபகரிக்க நினைப்பதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் பழம்பெரும் நடிகரான மோகன் பாபு, தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழித்திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர், சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தில் ராணுவ உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல, சமந்தா நடித்த சாகுந்தலம் படத்தில் விஸ்வாமித்தரராக நடித்திருந்தார். இவருக்கு வித்யா என்ற மனைவியும் லட்சுமி மஞ்சு என்ற மகளும் மனோஜ் மஞ்சு மற்றும் விஷ்ணு மஞ்சு என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

மகன் மீது புகார்: இந்நிலையில், நடிகர் மோகன் பாபு தனது மகன் மனோஜ் மஞ்சு மற்றும் மருமகள் மோனிகா மீது ரச்சகொண்டா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகார் மனுவில், எனது மகன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன், மனைவி மோனிகாவை அழைத்துக்கொண்டு, 7 மாத மகளை மட்டும் வீட்டுப் பணிப்பெண் பராமரிப்பில் விட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து, திடீரென டிசம்பர் 9ந் தேதி, மாதப்பூரில் உள்ள எனது அலுவலகத்தில் நான் இருந்த போது, எனது மகன் மனோஜ், சுமார் 30 பேருடன் எனது வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக அத்துமீறி நுழைந்து, எனது வீட்டில் வேலை செய்பவர்களை மோசமான முறையில் அச்சுறுத்தி உள்ளனர். மேலும், அந்த வீட்டை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வைத்துள்ளனர்.
வீட்டை அபகரிக்க முயற்சி: அவர்கள் என்னைத் துன்புறுத்தும் நோக்கத்துடன் நான் வீட்டிற்குத் திரும்புவதற்காகக் காத்திருக்கிறார்கள். வீட்டில் அடி ஆட்கள் இருப்பதால் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இப்படி ஒரு பயத்தை உண்டாக்கி, என்னை நிர்பந்தம் செய்து அந்த வீட்டை அவர்கள் அபகரிக்க நினைக்கின்றனர். கடுமையாக நான் உழைத்து சம்பாதித்த அந்த வீட்டில் மதிப்புமிக்க பல பொருட்கள் உள்ளன. ரௌடிகள் வீட்டில் இருப்பதால், நான் உட்பட என் வீட்டில் இருப்பவர்களும் பயத்துடன் உயிருக்கு பயந்து இருப்பதாகவும், அந்த வீட்டில் இருந்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் மகன் மனோஜ் மற்றும் மருமகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு மோகன் பாபு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











