காமெடி நடிகர் சூரி தொடர்ந்த மோசடி வழக்கு.. போலீசார் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: நடிகர் சூரி தொடுத்த மோசடி வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் பிரபலமானார்.
விஜய், அஜித், விஷால், சூர்யா உள்பட முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார்.

புகார் மனு
இப்போது வெற்றிமாறன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். கொரோனாவால் இதன் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சூரி, சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

மோசடி செய்ததாக
அதில், நிலம் வாங்கி தருவதாகக் கூறி, 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, 'வீர தீர சூரன்' படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா மீது புகார் கொடுத்திருந்தார்.

வழக்குபதிவு செய்தனர்
போலீஸ் கமிஷனரின் உத்தரவை அடுத்து அடையாறு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது அடையாறு போலீசார் வழக்குபதிவு செய்தனர். வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக, நடிகர் சூரிக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில், 40 லட்சம் ரூபாயை அன்புவேல் ராஜன் பாக்கி வைத்துள்ளார்.

விசாரணை நடக்கிறது
அதை தரமறுத்த நிலையில், நிலம் வாங்கி தருவதாகக் கூறி நடிகர் சூரியிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ரத்து செய்ய
இந்நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி அன்புவேல் ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ரவீந்திரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பரிவு போலீசார், 8 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications