Soori: இது எங்க வீட்டு பொங்கல்.. சொந்த பந்தத்துடன் தடபுடலாக பொங்கல் கொண்டாடிய சூரி!
சென்னை: நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இன்றைக்கு கதையின் நாயகனாகவும் கதாநாயகனாகவும் வளர்ந்து நிற்கின்றார் சூரி. இவர் காமெடியனாக பல படங்களில் நடித்திருந்தாலும், கதாநாயகனாக மற்றும் கதையின் நாயகனாக நடித்து வெளியாகியுள்ள படங்களின் எண்ணிக்கை 4. தனது அட்டகாசமான நடிப்பினால் மாபெரும் வெற்றியைப் பெற்ற சூரி, இந்த ஆண்டு பொங்கலை தனது வீட்டில், தனது சொந்த பந்தங்களுடன் கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினைப் பகிர்ந்துள்ளார்.

நடிகர் சூரி நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. குறிப்பாக கருடன் படத்தில் இவரது கதாபாத்திரம், அந்த கதாபாத்திரத்திற்காக இவர் தனது உடல் மொழியில் காட்டிய வித்தியாசம், வசன உச்சரிப்பு, மூச்சு விடாமல் வசனத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் என சூரி அந்த படத்தில் காட்சிக்கு காட்சி வேரியேஷன்ஸ் காட்டினார். இதுமட்டும் இல்லாமல், இதற்கு முந்தய படமான விடுதலை படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி, சூரி சண்டை போட்டாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற மனநிலையை ஏற்படுத்தியது. அப்படி இருக்கும்போது, கருடன் படத்தில் சூரிக்கு அட்டகாசமான சண்டைக் காட்சிகள் இருந்தது.

கமர்ஷியல் படங்களுக்கான மெட்டீரியல் மட்டும் கிடையாது, தான் ஒரு உலகத்தரமான படத்தின் கதையையும் புரிந்து கொண்டு நடிக்கும் வல்லமை கொண்டவன் என நிரூபித்த படம்தான், கொட்டுக்காளி. இந்தப் படத்தின் புற்றுநோய்க்காக தனது கழுத்தில் சுண்ணாம்பினைத் தடவும் காட்சியில் இருந்து, அன்னா பென்னை கடுமையாக தாக்கும் காட்சி, க்ளைமேக்ஸில் மனம் மாறும் காட்சி என பிரமாதப்படுத்தியிருப்பார்.

சூரி: கடந்த ஆண்டின் கடைசியில் வெளியான விடுதலை பாகம் 2 படத்தில் அவருக்கு பெரிய அளவிலான திரைப்பகிர்வு இல்லை என்றாலும், அவருக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் அட்டகாசமாக ஸ்கோர் செய்தார். சூரி தற்போது எடுத்திருக்கும் முடிவு மிகவும் சரியான முடிவுதான் என ரசிகர்கள் கூறும் அளவிற்கு உள்ளது. இனி வரும் காலங்களில் கதாநாயகனாகவும் கதையின் நாயகனாகவும் நடிக்க முடிவு செய்துள்ளார்.

சொந்த பந்தங்கள்: இப்படியான நிலையில் சூரி இந்த முறை பொங்கலை தனது குடும்பத்தினர் மற்றும் சொந்த பந்தங்களுடன் கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவும் பகிர்ந்துள்ளார். அதில் தனது குடும்பத்தினருடனும் சொந்த பந்தங்களுடனும் இணைந்து பொங்கல் வைத்தது மட்டும் இல்லாமல், தனது வீட்டு வாசலில் கால் பந்து விளையாடியும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். அனைவரும் ஒரே மாதிரி புத்தாடை உடுத்தி மகிழ்ச்சியாக உள்ளனர்.

எங்க வீட்டு பொங்கல்: மேலும், இந்த வீடியோவுக்கு சூரி, "குடும்பத்திற்குள் விட்டுக்கொடுங்கள்' அன்புகாட்டுங்கள் ! அனுசரித்துப் போங்கள் ! இந்தக் குடும்பத்தில் ஒருவனாக நிற்பதே என் கொடுப்பினை ! கூடுவோம்... கொண்டாடுவோம்! இது எங்கள் வீட்டுப் பொங்கல்.." என அட்டகாசமான கேப்ஷனும் இட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் வாரி, வழங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











