திருமணம் செய்துகொள்ளும் தைரியம் எப்படி வந்தது தெரியுமா?.. மனம் திறந்த சூரி
சென்னை: சூரியின் நடிப்பில் வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் நாளை வெளியாகவிருக்கிறது. காமெடி ஆக்டர் என்ற நிலையிலிருந்து கதையின் நாயகன் என்ற நிலைக்கு வெற்றிமாறன்தான் சூரியை நகர்த்தினார். விடுதலை படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து படத்தின் இரண்டாவது பாகத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க சூரி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சினிமாவில் கிடைத்த சின்ன சின்ன வேலைகளை எல்லாம் செய்தவர் சூரி. பள்ளி படிப்பை தாண்டாத அவர் சென்னைக்கு வந்து தனது சினிமா கனவு நோக்கிய பயணத்தை தொடர்ந்தார். அந்தப் பயணத்தில் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்த அவர்; உணவுகூட உண்ணாமல் வெறும் தண்ணீரை குடித்து பசியை போக்கிய காலம் எல்லாம் உண்டு. அதேபோல் கலாபக் காதலன் திரைப்படத்தின் ஆடிஷனுக்காக சென்றபோது பசி மயக்கத்தில் அங்கேயே சுருண்டு விழுந்த கதையும் உண்டு.

அடையாளம் பெற்ற சூரி: பிறகு எலக்ட்ரீசியன் வேலை, செட் அசிஸ்டெண்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என சினிமாவிலேயே தன்னை தக்க வைத்துக்கொண்ட அவருக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதில் இடம்பெற்ற புரோட்டா காமெடி சீன் காரணமாக அவரை புரோட்டா சூரி என்றே பலரும் அழைத்தார்கள். அந்தப் படத்துக்கு பிறகு சூரிக்கு வரிசையாக வாய்ப்புகள் கிடைத்தன. அதனை பயன்படுத்திக்கொண்ட அவர் படிப்படியாக முன்னேறினார்.
கதையின் நாயகன்: ஒருகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்த அவரை வெற்றிமாறன் விடுதலை படத்துக்கு அழைத்து வந்தார். அந்தப் படத்தில் கதையின் நாயகனாக சூரி ஜொலித்தார். ஒவ்வொரு சீனிலும் ரசிகர்கள் வித்தியாசமான சூரியை பார்த்தார்கள். ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் பட்டையை கிளப்பினார். அந்தப் படத்துக்கு பிறகு கொட்டுக்காளி, கருடன் ஆகிய இரண்டு படங்களில் நடித்த அவருக்கு கருடன் வணிக ரீதியாகவும், கொட்டுக்காளி விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
விடுதலை 2: சூழல் இப்படி இருக்க அவர் தற்போது விடுதலை 2 படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கிஷோர், கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் முதல் பாகம் போலவே இந்தப் பாகமும் மெகா ஹிட்டடிக்கும் என்கிற ஆவல் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. படமானது நாளை வெளியாகவிருக்கும் நிலையில்; படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படு பிஸியாக இருக்கிறார் சூரி. அந்தவகையில் ஒரு பேட்டியில் அவர் பேசியிருக்கும் விஷயம் கவனம் ஈர்த்திருக்கிறது.
சூரியின் பேட்டி: அவர் பேசுகையில், "1,500 ரூபாய் வாடகைகூட தர முடியாமல் வாழ்ந்த எனக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் வெண்ணிலா கபடி குழு/ அந்தப் படத்தில் வரும் புரோட்டா காமெடி சீன் கொடுத்த அடையாளத்தால்தான் எனது வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்ளும் தைரியம் எனக்கு வந்தது. ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு புரோட்டாவே பிடிக்காது. சினிமாவில் நான் பார்க்காத வேலையே இல்லை. சீரியலில் ஒருவரி வசனம் பேசும் வாய்ப்பு வந்தால்கூட அதனை நான் பயன்படுத்திக்கொண்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











