நான் சிவகார்த்திகேயனாகவோ, விஜய்சேதுபதியாவோ இருந்தா என்ன பண்ணியிருப்பேன் தெரியுமா?.. சூரி பளிச்!
சென்னை: சூரி நடித்துள்ள கருடன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சூரிக்காக விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் ஒரே மேடையில் இணைந்து அவருக்காக குரல் கொடுத்ததுதான்.
விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் உடன் பல படங்களில் சூரி நடித்துள்ளார். அந்த நட்புக்காக வெற்றிமாறன் கதையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள கருடன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நடிகர் சூரியிடம் ஒரு நாள் சிவகார்த்திகேயனோட உடம்பிலோ, விஜய் சேதுபதியின் உடம்பிலோ நீங்கள் கூடு விட்டு கூடு பாய்ந்தால் என்ன செய்வீர்கள் என்கிற கேள்வியை தொகுப்பாளர்கள் எழுப்ப அதற்கு தூள் கிளப்பும் பதிலை சூரி கூறியுள்ளார்.
சூரியின் கருடன்: காமெடி நடிகராக பரோட்டா சூரியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சூரி தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் தொடர்ந்து போராடி வந்த நிலையில் தற்போது ஹீரோவாக மாறியுள்ளார். கடந்தாண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் கொடுத்தது. மேலும், விடுதலை 2, கொட்டுக்காளி, கருடன் என சூரி நடிப்பில் மூன்று படங்கள் ரிலீசுக்கு ரெடியாக உள்ளன. அதில் முதலாவதாக கருடன் படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது.
மிரட்டும் கருடன் டிரைலர்: எதிர்நீச்சல், கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா, ஷிவதா நாயர், சமுத்திரகனி மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கருடன் படத்தின் டிரைலர் இன்று வெளியானது. யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் சூரி தனுஷுக்கே டப் கொடுக்கும் விதமாக அசுரன் ஆகவே மாறி நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் ஆக மாறினால்: ஒரு நாள் கூடுவிட்டு கூடு பாய்ந்து தம்பி சிவகார்த்திகேயன் உடம்புக்குள் சென்றால் உடனடியாக 10 தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸை வாங்கி போட்டுக்கொண்டு ஹேப்பியாக இருந்து விடுவேன் என சூரி சிவகார்த்திகேயனை அருகில் வைத்துக்கொண்டு பேசியது அனைவரையும் மெதுவாக கவர்ந்துள்ளது.
விஜய் சேதுபதி உடம்புக்கு சென்றால்: தமிழ் பட தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி பாலிவுட் தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸை வாங்கி போட்டுக் கொள்வேன். மேலும், ஆன் தி வேயில் அமீர் கானை வா மாமா என்றும் ஷாருக்கானை என்ன மச்சான் எப்படி இருக்க என்றும் தீபிகா படுகோனிடம் 2 நிமிஷம் பேசிட்டும் வந்துடுவேன். அதுக்குள்ள ஒரு நாள் முடிந்துவிடும். அதன் பின்னர் இவர்கள் பொறுப்பு என இருவரையும் மேடையில் வைத்துக் கொண்டு கலகலப்பாக பேசி அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளார்.
இருவருடன் நெருக்கம்: வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்தில் விஜய்சேதுபதியுடன் சூரி நடித்து வருகிறார். அதே போல சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி படத்தில் சூரி நடித்துள்ளார். இந்நிலையில், சூரியின் அழைப்பை மறுக்காமல் இருவரும் அவருக்காக ஒன்றாக வந்து பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. சிவகார்த்திகேயனுக்காக விஜய்சேதுபதி மாவீரன் படத்தில் வாய்ஸ் கொடுத்திருந்தார். இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











