Maaman Blue Sattai Maran Review: ப்ளூ சட்டை மாறனிடம் சிக்கிய மாமன்.. என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?
சென்னை: சூரி கதை எழுதி , நடித்துள்ள படம் மாமன். இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நேற்று அதாவது மே 16ஆம் தேதி வெளியானது. படத்தில் சூரி உடன் ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரண் என பலர் நடித்துள்ளார்கள். படம் குடும்ப உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படம் எப்படி உள்ளது என்பது குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
மாமன் படத்தின் விமர்சனம் தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், " இந்த படத்தின் கதையை பற்றிப் பார்த்தோம் என்றால், படத்தின் கதாநாயகன் சூரிக்கு ஒரு அக்கா உள்ளார். சூரியின் அக்காவுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை என்ற கவலையில் உள்ளார்கள். இந்நிலையில் அந்த அக்காவுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையை மிகவும் ஆசையாக வளர்க்கிறார் சூரி. எங்கே போனாலும் அழைத்துச் செல்வார். அவருடன் தான் அந்த குழந்தை உறங்கும். அந்த குழந்தைக்கு என்ன வேண்டும் என்றாலும் சூரி தான் செய்வார்.

அப்படி இருக்கும்போது ஒரு கட்டத்தில் சூரி காதல் திருமணம் செய்கிறார். திருமணம் முடிந்த பின்னர், அந்த குழந்தை முதல் இரவில் நானும் வந்து படுப்பேன் என்று அடம் பிடிக்கிறார். அது ஒரு பெரும் பிரச்னையை கிளப்புகிறது. அதன் பிறகு ஹனிமூன் போகிறோம் என்று அந்த ஜோடி கூறும்போது, நானும் ஹனிமூனுக்கு வருகிறேன் என்று கூறுகிறது அந்த குழந்தை. அங்கிருந்து பிரச்னை ஆரம்பிக்கிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் கதை.
பாராட்டு: படத்தின் ஆரம்பம் எல்லாம் நன்றாக இருந்தது. குறிப்பாக அக்காவை அவரது மாமியார் ஒரு விழாவில் ஒரு கேள்வி கேட்டு விடுவார். உடனே கோபத்தில் வரும் அக்கா மாமியாரை ஏதாவது கேட்பார் என்று நினைத்தால், அங்கு வேறு ஒன்று நடக்கும் அந்த சீன் எல்லாம் ரொம்பவும் நன்றாக இருக்கும். அக்கா கர்ப்பமாகும் சீனையே மிகவும் த்ரில்லிங்காக எடுத்திருந்தார்கள் அதுவும் சிறப்பான காட்சியாக இருந்தது. அதன் பிறகு சூரியின் கல்யாணம் வரை படம் நன்றாகத்தான் இருந்தது. அதன் பின்னர், முதல் இரவில் அந்த குழந்தை வந்து படுக்கிறேன் என்று அடம் பிடித்து, அங்கு சென்று படுத்த காட்சி எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் பின்னர் வந்த எந்த காட்சியையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ரசனையான காட்சிகள்: ஒரு வீட்டில் இருக்கும் குழந்தை ஆசைப்படுகிறான் என்றால் அதற்கு என்று ஒரு அளவுதான் உள்ளது. எதை எதை குழந்தைக்கு கொடுப்பது என்று உள்ளது அல்லவா? கண்டிக்க மாட்டார்களா? இங்கே குடும்பத்தில் கணவனும் மனைவியும் சண்டை போட்டு சட்டை கிழிந்து, விவாகரத்து வரை சென்று நடு ரோட்டில் நிற்கிறார்கள். ஒருபுறம் என்னடா என்றால் குழந்தை ஆசைப்பட்டான் அதில் என்ன தவறு என்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகள் நெஞ்சை நக்குவது போல இருந்தது, அவை ரசிக்கும் படியாகவும் இருந்தது.

தேவையில்லாத ராஜ் கிரண்: அதன் பின்னர் மொத்த படக்குழுவும் கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கிவிட்டார்கள். 65 காட்சிகளிலும் எப்படி நெஞ்சை நக்குகிறோம் என்று பாருங்கள் என்று. காட்சிக்கு காட்சி நெஞ்சை நக்கி உயிரை வாங்கிவிட்டார்கள். இருக்கும் காட்சிகள் பத்தாது என்று எக்ஸ்ட்ராவாக ராஜ்கிரண் கதாபாத்திரத்தை உள்ளே போட்டு, அவர் ஒரு பக்கம். அவருக்கும் இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை. அவரது காட்சிகளை நீக்கிவிட்டால், படத்திற்கு எந்த பாதிப்பும் வராது. அவரை படத்திற்குள் சேர்த்து ஆடியன்றை சாகடித்து விட்டார்கள்.
குடும்ப படம்: இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று, உயிரோடு இருக்கும் சூரி புகைப்படத்திற்கு மாலை போட்டு அங்கு ஒரு வேலையைப் பார்த்தார்கள் பாருங்கள், எப்பாடா தாங்க முடியவில்லை. இப்போது எல்லாம் என்ன படம் எடுக்கிறார்கள்? ஒரே வெட்டு, குத்து, ரத்தம், ஒரு பக்கம் போதை மருந்து கடத்தல், துப்பாக்கி, பீரங்கி படமா எடுக்கிறார்கள்? ஒரு நல்ல குடும்பப் பாங்கான படம் எடுக்கிறார்களா? மாமன் மச்சான் உறவு, அக்கா தங்கச்சி உறவு, அண்ணன் தம்பி உறவு என யாராவது குடும்பப் பாங்கான படம் எடுக்கிறார்களா என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போது, நாங்கள் எடுக்கிறோம் பார் என்று, மாமன் - மருமகன் உறவு குறித்து படம் எடுக்கிறோம் பார் என்று படத்தை எடுத்துள்ளார்கள்.
கதையை வளர்க்க தெரியவில்லை: இவர்கள் குழந்தயை வளர்க்கத் தெரியாமல் வளர்த்து, அது தேவையில்லாத வேலையைப் பார்த்து, வள வள என்று கதையை வளர்த்து வைத்துள்ளார்கள். இவர்களுக்கு குழந்தையையும் வளர்க்கத் தெரியவில்லை, கதையையும் வளர்க்கத் தெரியவில்லை" என்று தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார். அவரது விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மாமன் படம் வெற்றி பெற வேண்டும் என சூரியின் ரசிகர்கள் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மண் சோறு சாப்பிட்டு, சூரியின் பெயரில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தார்கள். இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வேகமாக பரவியது.

சூரி ரியாக்ஷன்: ரசிகர்களின் இந்த செயல் குறித்து சூரியிடம் கேட்டதற்கு, " மதுரையில் தம்பிகள் சிலர் மாமன் படம் வெற்றி பெற வேண்டும் என்று மண் சோறு சாப்பிட்டுள்ளார்கள். என் படம் வெற்றி பெற ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டது தவறான செயல். இவர்கள் எனது ரசிகர்களாக இருக்க தகுதியில்லை. உணவிற்காக மிகவும் போராடியவன் நான். அந்த உணவை வைத்து இப்படி செய்வதை ஏற்க இயலாது. இச்செயலால் ஒரு படம் வெற்றி அடையாது" என்று பதில் அளித்தார். அவரது பதில் அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தாலும், பலரும் அவரது பதிலை பாராட்டினார்கள்.
ரஜினிகாந்த்: குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் சூரியின் பதிலுக்கு பாராட்டு தெரிவித்தது மட்டும் இல்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தையும் அட்டாக் செய்துள்ளார். நேத்து ஹீரோவான சூரி கூட தன் ரசிகர்கள் மண் சோறு சாப்புடறது முட்டாள்தனம்னு சொல்லிருக்காரு. 50 வருசமா உங்க படம் வரும்போதெல்லாம் ரசிகர்கள் மண் சோறு திங்கறாங்க. அதை கண்டிக்க வாய் வரல. நீங்கல்லாம் ஒரு பெரிய மனுசனா?" என்று பதிவிட்டுள்ளார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











