அய்யய்யோ இளையராஜா இருக்காரா?.. வண்டிய ஓரமா விடு.. விடுதலை 2வில் பதறிய சூரி
சென்னை: சூரியின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் விடுதலை 2. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் 20ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. முதல் பாகம் பெரும் ஹிட்டானது போல இந்தப் பாகமும் ஹிட்டாகி சூரிக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் விடுதலை 2 ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சூரியின் பேச்சு கலகலப்பை ஏற்படுத்தியது.
சினிமாவில் சின்ன சின்ன வேலைகளை செய்துகொண்டிருந்தவர் சூரி. லைட் மேன், செட் அசிஸ்டெண்ட் என எந்த வேலையாக இருந்தாலும் அதனை சினிமாவுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொண்டார் அவர். அதனையடுத்து காதல், தீபாவளி உள்ளிட்ட படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக சில சீன்களில் வந்து போனார். இருந்தாலும் அனைவராலும் அறியப்படும் நடிகனாக ஒரு நாள் மாறுவேன் என்ற நம்பிக்கையோடு சினிமாவில் தொடர்ந்து பயணப்பட்டுக்கொண்டிருந்தார் அவர்.

வெண்ணிலா கபடி குழு: சூழல் இப்படி இருக்க சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தில் அவர் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அதில் பரோட்டா சாப்பிடும் சீன் சூரியின் ஒட்டுமொத்த சினிமா பசிக்கும் தீனி போட்டு அவரை அடையாளப்படுத்தியது. அதற்கு பிறகு சூரி பரோட்டா சூரி ஆனார். தொடர்ந்து அவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு தனது திறமையை நிரூபித்துக்கொண்டே இருந்தார். அதன் காரணமாக முன்னணி காமெடி நடிகராக மாறினார்.
கதையின் நாயகன்: இதனையடுத்து வெற்றிமாறனின் கண்கள் சூரி மீது பட; விடுதலை படத்தின் முதல் பாகத்தில் கதையின் நாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்தில் சூரியின் நடிப்பு வெகுவாக ரசிக்க வைத்து அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் பயணப்படுகிறார் அவர். அப்படி அவர் நடித்த கருடன், கொட்டுக்காளி ஆகிய இரண்டு படங்களுமே அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது.
விடுதலை 2: முக்கியமாக கருடன் திரைப்படம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படமும் விடுதலை முதல் பாகம் போல சூரிக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமை இப்படி இருக்க படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சூரி பேசினார்.
சூரி பேச்சு: மேடையில் அவர் பேசுகையில், "பாடல் விழா மட்டுமில்லாமல் காதுகுத்து விழா, திருமண விழா, திருவிழா என எந்த விழாவாக இருந்தாலும் கடந்த 49 ஆண்டுகளாக இளையராஜாதான் ஒரே நாயகன். அவரது பாடல்களை கேட்டு வளர்ந்தவன் நான். அப்படிப்பட்ட ஒருவன் அவரது இசையில் நடித்திருக்கிறேன் என்பது பெருமையாக இருக்கிறது. விடுதலை 2 பாடலை கேட்ட பிறகு ஒரு ஐபிஎஸ் அதிகாரி எனக்கு ஃபோன் செய்து; 'என்னங்க அந்த மனுஷன் ( இளையராஜா) இப்படி ஒரு பாட்ட போட்டு வெச்சிருக்காரு என்று பிரமித்தார்.
பதறிப்போனேன்: தினம் தினம் உன் நினைப்பு பாடல் வெளியீட்டுக்காக அவரது ஸ்டூடியோவுக்கு சென்றேன். அப்போது அங்கிருந்தவரிடம் எல்லோரும் வந்துவிட்டார்களா என்று கேட்டேன். அவரோ இன்னும் யாரும் வரவில்லை. உள்ளே இளையராஜா மட்டும்தான் இருக்கிறார் என்று சொன்னார். உடனே நான் பதறிப்போய் எனது டிரைவரிடம், வண்டியை ஓரமா விட்டுடு என்று சொல்லிவிட்டேன். ஏனெனில் இளையராஜாவிடம் தனியாக அமர்ந்து பேசும் அளவுக்கு ஆள் நான் இல்லை. கொஞ்ச நேரம் கழித்து விஜய் சேதுபதி உள்ளே இளையராஜாவிடம் பேசிக்கொண்டிருப்பதாக சொன்னார்கள். அதற்கு பிறகுதான் தைரியம் வந்து உள்ளே சென்றேன். அப்போது அவர் தன்னுடைய ஆரம்பகால அனுபவங்கள் எல்லாத்தையும் சொன்னார். அது எனக்கு பொக்கிஷம்" என்றார்.


Click it and Unblock the Notifications











