Soori On Rajinikanth - என்ன சொல்றதுனே தெரியல தலைவரே.. பாராட்டிய ரஜினி நெகிழ்ந்துபோன சூரி
சென்னை: Soori On Rajinikanth (ரஜினிகாந்த்துக்கு சூரி சொன்ன நன்றி) விடுதலை படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் பாராட்டியதை அடுத்து கதையின் நாயகன் சூரி நெகிழ்ந்துபோய் ட்வீட் செய்திருக்கிறார்.
இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் நடிகர் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோரை வைத்து விடுதலை படத்தை உருவாக்கியிருக்கிறார் . மக்கள் படை குறித்தும், இன விடுதலை குறித்தும் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. இப்படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. இதன் முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி ரிலீஸானது. விஜய் சேதுபதி, சூரி தவிர்த்து கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.

விடுதலை படத்தை கொண்டாடும் ரசிகர்கள்: தனது படைப்புகள் மூலம் ஆரோக்கியமான உரையாடலை சமூகத்தில் கிளப்புபவர் வெற்றிமாறன். வெக்கை நாவலில் இருந்து அசுரன் உருவானாலும் அந்தப் படத்தின் மூலம் பஞ்சமி நிலம் குறித்த உரையாடலை தொடங்கிவைத்தார். அதேபோல்தான் விடுதலை படத்தின் மூலம் காவல் துறையின் கோர முகத்தை இன்னொருமுறை வெளிச்சப்படுத்தியிருக்கிறார் வெற்றி என்ற கருத்து எழுந்திருக்கிறது. படத்தை ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர்.
ராஜா ராஜாதான்ப்பா: விடுதலையில் முதல்முறையாக இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார் வெற்றிமாறன். கதைக்களம் வித்தியாசமாக இருப்பதால் இளையராஜா எப்படிப்பட்ட இசையை கொடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இளையராஜாவின் இசை மெய் சிலிர்க்க வைப்பதாகவும், படத்தின் பாடல்களும் தாலாட்டும் உணர்வை கொடுப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

சூரியின் நடிப்புக்கு கிடைக்கும் செம ரெஸ்பான்ஸ்: நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரியை இந்தப் படத்தின் மூலமாக கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன். அதற்கு நியாயம் செய்யும் விதமாக சூரியும் குமரேசன் என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். நடிப்போடு மட்டுமின்றி ஆக்ஷன் காட்சிகளிலும் மிகப்பெரிய ரிஸ்க்கை அவர் எடுத்திருக்கிறார்.
விடுதலை படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்: இப்படி படத்துக்கு கதை ரீதியாகவும், சூரியின் நடிப்பை பாராட்டியும் பலர் பேசிவருகின்றனர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் விடுதலை படத்தை பார்த்தார். படம் பார்த்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
"விடுதலை இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு பிரமிப்பு. இளையராஜா இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்" என வாழ்த்தி ட்வீட் செய்திருந்தார். மேலும் வெற்றிமாறன், சூரி, எல்ரெட்குமாரை நேரிலும் பாராட்டினார் ரஜினி. அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகின.
ரஜினிகாந்த்தின் பாராட்டு; நெகிழ்ந்துபோன சூரி: இந்நிலையில் ரஜினிகாந்த் பாராட்டியதை அடுத்து சூரி நெகிழ்ந்துபோயிருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்ன சொல்றதுன்னே தெரியலை தலைவரே... நெஞ்சார்ந்த நன்றிகள் .. என் கால்கள் தரையில் இல்லை.. கனவிலும் நினைக்காத தருணங்களை தற்போது வாழ்ந்து வருகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











