Soori: "சூரி பஞ்சாயத்து ஓவர்.. அந்த நபர் தான் எல்லாத்துக்கும் காரணம்..” மனம் திறந்த விஷ்ணு விஷால்
சென்னை: விஷ்ணு விஷால் - சூரி கூட்டணி வெண்ணிலா கபடி குழு முதல் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால், விஷ்ணு விஷாலின் அப்பா நிலம் வாங்கி தருவதாக 2.7 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக சூரி குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இதுபற்றி காவல்துறையிலும் புகார் கொடுத்திருந்த நிலையில், தற்போது இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்ததாக விஷ்ணு விஷால் மனம் திறந்துள்ளார்.
எல்லாத்துக்கும் அந்த நபர் தான் காரணம்
விஷ்ணு விஷால் ஹீரோவாக அறிமுகமான படம் வெண்ணிலா கபடி குழு. சுசிந்திரன் இயக்கிய இந்தப் படம் விஷ்ணு விஷாலின் சினிமா கேரியரில் நல்ல தொடக்கமாக அமைந்தது. அதேபோல் சூரிக்கும் வெண்ணிலா கபடி குழு தான் மிகப் பெரிய அடையாளம் கொடுத்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் ரொம்பவே பிரபலமானார். இதற்கு முன்பு பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்தவர் சூரி.

வெண்ணிலா கபடி குழு கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சூரி, அடுத்தடுத்து பல படங்களில் காமெடியனாக நடித்தார். அங்கிருந்து தொடங்கிய பயணம் தான் தற்போது விடுதலை படத்தின் ஹீரோ வரை கொண்டு சென்றுள்ளது. அதேபோல் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஜீவா, குள்ளநரி கூட்டம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களிலும் சூரி காமெடியனாக நடித்தார்.
இந்நிலையில் இக்கூட்டணி இடையே திடீரென பிரிவு ஏற்பட்டது. அதற்கு காரணம் விஷ்ணு விஷாலின் அப்பா தான் என சொல்லப்பட்டது. அதாவது முன்னாள் டிஜிபியான விஷ்ணு விஷாலின் அப்பா ரமேஷ், நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.7 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக சூரி புகார் கொடுத்தார். சூரியின் இந்த குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுபற்றி காவல் துறையினரும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தச் சூழலில் சூரியுடனான பஞ்சாயத்து முடிவுக்கு வந்ததாக விஷ்ணு விஷால் மனம் திறந்துள்ளார். விஷ்ணு விஷால் நடித்த லால் சலாம் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டாரும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். லால் சலாம் வெளியானதை தொடர்ந்து விஷ்ணு விஷாலும் ரொம்பவே பிஸியாகிவிட்டார். பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சூரி பிரச்சினை பற்றியும் மனம் திறந்துள்ளார்.
அதில், "சமீபத்தில் நானும் நண்பர் சூரியும் சந்தித்து பிரச்சினை பற்றி பேசி சரி செய்துகொண்டோம். இந்தப் பிரச்சினை பெரிதான போதே எங்கள் இருவரையும் நேரில் சந்தித்து பேசும்படி எனக்கு நெருக்கமானவர்கள் கூறினர். ஆனால் அப்போது இருந்த விரக்தியில் அது எதுவும் முடியாமல் போய்விட்டது. பின்னர் நெருங்கி பேசும் போது தான் எனக்கும் சூரிக்கும் சில விஷயங்கள் புரிந்தன."
"மூன்றாவதாக வந்த ஒருவர் தான் இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். அவர் தான் எங்களுக்கு இடையே புகுந்து விளையாடியுள்ளார். நட்புக்குள் மூன்றாவதாக ஒரு நபரை தலையிடக் கூடாது என்ற வாழ்க்கைப் பாடத்தை இதிலிருந்து தான் கற்றுக்கொண்டேன். விரைவில் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அதேபோல் மீண்டும் நானும் சூரியும் இணைந்து நடிப்போம்" என விஷ்ணு விஷால் கூறியுள்ளார். இதுபற்றி சூரி தரப்பில் இருந்து இன்னும் எந்த விளக்கம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











