கடவுளே அ..தே.. விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தும் அதை சொன்னார்.. நடிகை வெளியிட்ட சீக்ரெட்
சென்னை: அஜித் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. எதிர்பார்ப்புடன் வெளியான படம் கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸாகிறது. இந்தச் சூழலில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் செய்த ஒரு செயல் குறித்து நடிகை சௌமியா பாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
துணிவு படத்துக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித்குமார். பிரேக் டவுன் என்கிற ஆங்கில படத்தை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது. விடாமுயற்சியில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் கமிட்டானார் அவர். ஒரே நேரத்தில் அஜித் இரண்டு படங்களில் பல வருடங்களுக்கு பிறகு நடித்தார். அதற்கு காரணம் கார் ரேஸ். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு தனக்கு பிடித்த கார் ரேஸில் கவனம் செலுத்த முடிவு செய்துதான் இப்படி ஒரு விஷயத்தில் இறங்கினார்.

விடாமுயற்சி ரிலீஸ்: விடாமுயற்சி திரைப்படம் கடந்த ஆறாம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது. வசூல் ரீதியாகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அஜித் என்ற மாஸ் ஹீரோவுக்கான படமே இது இல்லை என்று ஒருதரப்பினர் கூறுகிறார்கள். அதேசமயம் ஒரு பெரிய ஸ்டார்டம் உள்ள ஹீரோ இந்த மாதிரியான கதையில் நடிப்பது எல்லாம் அபூர்வம்; படம் நன்றாகத்தான் இருக்கிறது என்று இன்னொரு தரப்பினர் அழுத்தமாக சொல்லிவருகிறார்கள்.
குட் பேட் அக்லி ரிலீஸ்: ஆனால் அஜித்தின் தீவிர ரசிகர்களில் பெரும்பாலானோருக்கு படம் பிடிக்கவில்லை. அவர்கள் அனைவரும் ஆதிக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி படத்துக்காக காத்திருக்கிறார்கள். அந்தப் படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஒரே வருடத்தில் அஜித்தின் இரண்டு படங்கள் ரிலீஸாவதும் பல வருடங்களுக்கு பிறகு நடப்பது என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் அஜித்தின் ரசிகர் என்பதால் கண்டிப்பாக தேவையான மாஸ் சீன்களை படத்தில் வைத்திருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
நோ கடவுளே அஜித்தே: இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு அஜித் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், தன்னை யாரும் கடவுளுடன் ஒப்பிட்டு கோஷம் போட வேண்டாம். அஜித் என்றோ ஏகே என்றோ அழையுங்கள் போதும் என்று தெரிவித்திருந்தார். ஏற்கனவே தல என்ற பட்டத்தையும் தூக்கி எறிந்த அவர்; இப்படி ஒரு அறிக்கை விட்டது பலரிடமும் பெரிய வரவேற்பை பெற்றது. ரசிகர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கோஷம் போடுவதை குறைத்துவருகின்றனர்.
சமீபத்தில்கூட அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா விடாமுயற்சி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு சென்றிருந்தார். அப்போது ரசிகர்கள் சிலர் கடவுளே அ..தே என்று கோஷமிட்டனர். அதனை கவனித்த சுரேஷ், அவர்களை அழைத்து அவ்வாறு கோஷத்தை போட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். பிறகு ரசிகர்கள் ஏகே ஏகே என்று கத்தினர். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டானது. இந்நிலையில் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் குறித்து நடிகை சௌமியா பாரதி பகிர்ந்திருக்கிறார்.
என்ன நடந்தது: அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருந்த ஒரு ஸ்டோரியில், “விடாமுயற்சி படத்தின் முதல் நாள் ஷூட்டில் நான் பதற்றத்துடன் அமர்ந்திருந்தேன். அப்போது அஜித்தோ தனக்கான ஷாட்டை முடித்துவிட்டு சோர்வாக வந்து, 'கடவுளே’ என்று சொல்லியபடி அமர்ந்தார். பிறகு என்னை பார்த்து அஜித்தே என்று சிரித்துக்கொண்டே கூறினார். அதை பார்த்து நான் தெறித்துவிட்டேன். அஜித் அவ்வளவு ஜாலியான மனிதர்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, அஜித்தே இப்படி சொல்லியிருக்கும்போது அவர் ஏன் ரசிகர்களிடம் அப்படி சொல்லக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டார் என கேள்விகளை எழுப்பிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











