தென்னிந்திய நடிகர் சங்கம் பற்றி கருணாஸ் சொன்ன 'அடேங்கப்பா' கருத்து
சேலம்: இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படும் நடிகர் சங்கம் என்றால் அது தென்னிந்திய நடிகர் சங்கம் தான் என்று நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் விஷாலின் பாண்டவர் அணி போட்டியிடுகிறது. பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

பொதுச் செயலாளர் பதவிக்கு எதிரணி சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களத்தில் உள்ளார். இந்நிலையில் பாண்டவர் அணியை சேர்ந்த கருணாஸ் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது அவர் கூறியதாவது,
இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படும் நடிகர் சங்கம் என்றால் அது தென்னிந்திய நடிகர் சங்கம் தான். பாண்டவர் அணி சிறப்பாக செயல்படுகிறது. நடிகர் சங்க கட்டிடம் மூலம் வரும் வருமானத்தில் நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்படும்.
பாண்டவர் அணி அளித்த வாக்குறுதிகளை எல்லாம் முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். தென்னிந்திய நடிகர் சங்க சொத்துக்கள் ஒரு காலமும் அடமானத்தில் செல்லக் கூடாது. நான் பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி நாடகக் கலைஞர்களுக்கும், கிராமியக் கலைஞர்களுக்கும் என் மூச்சு உள்ள வரை குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன்.
நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியை எதிர்த்து போட்டியிட சிலர் முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல்லில் இருக்கும் எனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை முதிர்ந்த தென்னிந்திய நடிகர்களுக்கும், நாடக நடிகர்களுக்குமான முதியோர் இல்லம் கட்ட கொடுக்கப் போகிறேன். அம்மாவிடம் சீட்டு வாங்கி சட்டமன்ற உறுப்பினர் ஆனவன் நான். அவர் இல்லாத சட்டசபைக்கு செல்ல இஷ்டம் இல்லை என்றார்.
பாண்டவர் அணியின் செயல்பாடுகள் குறித்து ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் மீண்டும் போட்டியிடுகிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக உள்ள விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவர் தேர்தல் களத்தில் குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











