தயாரிப்பாளர்கள் பிரச்னையில் விஷாலைக் கழட்டிவிட்ட நடிகர் சங்கம்? சுமூகமாக முடிந்த தனுஷ் விவகாரம்!
சென்னை: தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் விஷால் மீது ஏகப்பட்ட புகார்கள் முன்வைக்கப்பட்டு, தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு நடிகர் சங்கத்திற்கு அளித்தனர். இது மட்டும் இல்லாமல் படப்பிடிப்புகள் ரத்து, தொடர் வேலை நிறுத்தம், புதிய படங்கள் தொடங்கக் கூடாது, ஏற்கனவே உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும்வரை இந்த நிலை தொடரும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து கடந்த ஜூலை 30ஆம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது. இது நடிகர் சங்கத்தினருக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் அளித்தது.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து முன்வைக்கப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும் விதமாக நடிகர் சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 25ஆம் தேதி, சென்னையில் உள்ள என்.எஃப்.டி.சி. திரையரங்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர்கள் கருணாஸ் மற்றும் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் தியாகராஜன், நடிகர்கள் விஜய் சேதுபதி, பிரஷாந்த், ஆர்யா, கோவை சரளா, சிபி, விக்னேஷ், விஜய் ஆண்டனி, ராஜ்கிரண், ஷாம், குட்டி பத்மினி, லதா, ரெடின் கிங்ஸ்லி,யோகிபாபு எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர் சங்கத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்தும் தயாரிப்பார்ளர் சங்கத்தினர் முன்வைத்துள்ள பிரச்னைகள் குறித்தும் பேசியுள்ளனர். மேலும், தயாரிப்பாளார்கள் விவகாரத்தில் தயாரிப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவும், தயாரிப்பாளர்களுடன் எப்போதும் நட்புணர்வோடு பழகி, தற்போது முன் வைக்கப்பட்டுள்ள பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணவும் முயற்சிகள் எடுப்பது என்றும் பேசி முடிவெடுத்ததாக கூறப்படுகின்றது.

தனுஷ்: குறிப்பாக தனுஷ் விவகாரத்தைப் பொறுத்தவரையில், தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுடன் படம் செய்வதாக கூறியுள்ளார். ஆனால், படத்தினைத் தொடங்காமல், மற்ற படங்களில் நடித்து வருகின்றார் என்ற குற்றசாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இந்த குற்றச்சாட்டுகளை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தினை தானே இயக்கி நடிக்கவும் செய்தார். படத்தின் படப்பிடிப்பினை, தொடங்கி சில தினங்களில் இது கைவிடப்பட்டது. இதனால் தேனாண்டாள் முரளி ராமசாமி தனுஷ் தனக்கு புதிய கதையில் ஒரு படம் தயாரித்துக் கொடுக்க ஒப்புக்கொண்டுவிட்டதாக, நடிகர் சங்கத்திற்கு அவரே கடிதம் அனுப்பியுள்ளார் என கூறப்படுகின்றது.

பண விவகாரம்: அதேபோல் ஆடுகளம் படத்தினைத் தயாரித்த கதிரேசன் என்பவரிடம் வாங்கிய முன் பணத்தை தனுஷ் திருப்பித் தர ஒப்புக்கொண்டுவிட்டார் எனவும் கூறப்படுகின்றது. ஆனால் கதிரேசன் தரப்பில் இருந்தோ, தன்னிடம் வாங்கிய முன் பணத்திற்கு வட்டியுடன் பணத்தை திருப்பித் தரவேண்டும் என கேட்டுக் கொண்டதாக கூறப்படுகின்றது. இதனால் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றது. எனவே, தனுஷ் பிரச்னை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

விஷால்: அதேநேரத்தில் நடிகர் விஷால் மீதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நடிகர் சங்க கூட்டத்தில், நடிகர் விஷால் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவில்லை. விஷால் ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர் பொறுப்பில் இருந்ததால், நடிகர் சங்கத்தின் சார்பில் இது தொடர்பாக எதுவும் விவாதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.



Click it and Unblock the Notifications











