தனுஷ் மீது இதுவரை ஒரு புகார் கூட இல்லை - தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கைக்கு கார்த்தி விளக்கம்
சென்னை: நடிகர் தனுஷ்க்கு இப்போது நல்ல நேரமா கெட்ட நேரமா எனத் தெரியவில்லை. ஒரு பக்கம் தனது 50வது படத்தினை தானே இயக்கி நடித்துள்ளார். அந்த படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது. படம் நான்கு நாளில் கிட்டத்தட்ட ரூபாய் 50 கோடிகளை வசூல் செய்துள்ளது. இப்படியான நல்ல செய்திகளுக்கு மத்தியில் இருந்துகொண்டு இருந்த தனுஷ்க்கு இப்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதாவது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதியில் இருந்து படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், " நடிகர் தனுஷ் அவர்கள் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என குறிப்பிடப்படுள்ளது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தினரின் இந்த முடிவு குறித்து நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி பதில் அளித்துள்ளார். அதில், " தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக இந்த முடிவினை எடுத்திருப்பது எங்களுக்கு வருத்தம் அளிக்கின்றது. இதுவரை தயாரிப்பாளர் சங்கத்தினர் தரப்பில் இருந்தோ, நடிகர் சங்கத்தினர் தரப்பில் இருந்தோ பிரச்னைகள் எழுந்தால், அதனை குழுக்கள் அமைத்து உரிய முறையில் தீர்த்து வைத்து வருகின்றோம். இப்படியான நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தினர் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர்.
தனுஷ் மீது புகார்: அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேலை நிறுத்த புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தயாரிப்பாளர் சங்கத்தினர் முன்வைத்த பிரச்னைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக தீர்க்கப்பட்டு வருகின்றது. தற்போது அவர்கள் முன்வைத்துள்ள தனுஷ் மீதான புகார் என்பது எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக வரவில்லை. இது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து எந்த புகார் அளித்தாலும் அதற்கு நாங்கள் பதில் அளித்து வருகின்றோம். தனுஷ் குறித்த அவர்களின் புகாருக்கும் பதில் கேட்டுள்ளோம்.

வேலை நிறுத்தம்: தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக எத்தனையோ தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கும். மேலும் இனிவரும் காலங்களில் தனுஷை வைத்து படம் எடுப்பதற்கு முன்னதாக தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத்தில் கலந்தாலோசிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை எதனால் முன்னெடுத்தார்கள் என்பது தெரியவில்லை" என நடிகர் கார்த்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கண்டனம்: அதேபோல், நடிகர் சங்க துணைத் தலைவர் நடிகர் கர்ணாஸ், "வேலை நிறுத்தத்தை அறிவிக்கின்றார்கள் என்றால் அனைத்து சங்கத்தினரையும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படவேண்டும். ஆனால் தயாரிப்பாளார் சங்கத்தினர் தன்னெழுச்சியாக இந்த முடிவினை எடுத்திருப்பதை நடிகர் சங்கத்தின் சார்பாக கண்டிக்கின்றோம்" என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











