பாக்கியராஜ் vs எஸ்.ஏ. சந்திரசேகர்.. பரபரப்பாக நடக்கும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்
சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் தற்போது சென்னை, வடபழனியில் உள்ள மியூசிக் யூனியனில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
அரசியல் தேர்தலை விட சினிமாவில் ஏகப்பட்ட தேர்தல் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம் என ஏகப்பட்ட சங்கங்கள் உள்ளன. தற்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தல் சூடு பிடித்துள்ளது.

இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். தலைவர், பொதுச்செயலாளர், துணைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட 21 பதவிகளுக்காக இந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்தல் செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மியூசிக் யூனியனில்
சென்னை, வடபழனி மியூசிக் யூனியனில் காலை 8 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில், பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் ஒரு அணியும் வசந்தம் என்ற மற்றொரு அணியும் போட்டியிடுகின்றனர். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுகிறார். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு
இந்த சங்கத்தில் 570 பேர் எழுத்தாளர்உறுப்பினராக உள்ளனர். அதில் 485 பேருக்கு மட்டும் தான் வாக்களிக்க தகுதி உள்ளது. இன்று (செப் 11) இரவுக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் நிலவரம் அறிவிக்கப்படும். தலைவர், பொதுச் செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட 21 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

பாக்கியராஜ் vs எஸ்.ஏ. சந்திரசேகர்
தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் தலைவராக நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜ் இருந்து வரும் சூழலில் மீண்டும் அவர் அந்த பதவிக்கு போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து இயக்குநரும் நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ. சந்திரசேகர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வரும் நிலையில், யாருக்கு வெற்றி கிடைக்கும் என்கிற ஆர்வம் திரைத்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











