SPB Birthday : இசையாய் என்றும் மலரும்.. எஸ்.பி.பி-யின் 77வது பிறந்தநாள் இன்று!
சென்னை : எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் 77வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கோடான கோடி இசைபிரியர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்.பி பாலசுப்பிரமணியன்.
என்றும் மறக்க முடியாத அந்தப் பெரும் பாடகன் இந்த மண்ணுலகை விட்டு நீங்கினாலும், அவரின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

ஆயிரம் நிலவே வா : அடிமைப்பெண் படத்தில் ஒரே ஒரு டூயட் பாடலுக்கு இளமையான குரலைத் தேடினார் எம்ஜிஆர். அப்போது எம்ஜிஆருக்கு அறிமுகமான எஸ்பிபி தனது முதல் பாடலை கேவி மகாதேவன் இசையில் பாடினார். இயற்கை என்னும் இளைய கன்னி பாடல் வெளியாவதற்கு முன்பாகவே அடிமைப் பெண் படத்தில் இவர் பாடிய ஆயிரம் நிலவே வா என்ற பாடல் வெளியானதால் இந்த பாடலே இவரின் முதல் பாடலானது.
வசீகரமான குரல் : இந்த பாடல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எம்ஜிஆரின் பல படங்களில் பாட எஸ்.பிபிக்கு வாய்ப்பு வந்தது. சிவாஜி தனது படங்களுக்கு டிஎம்எஸ் குரலை பெரிதும் விரும்பிய போது, எஸ்பிபியின் இளமையான குரலுக்காக பல படங்களில் வாய்ப்பு அளித்தார். எம்ஜிஆர், சிவாஜிக்கு டிஎம்எஸ் குரல் எப்படி பொருந்தி இருந்ததோ அதே போல, எஸ்பிபியின் குரல் கமல்,ரஜினி, விஜயகாந்த்,கார்த்திக்,மோகன் என பல முன்னணி நடிகர்களுக்கும் பொருந்தி இருந்தது.
16 மொழிகளில் : பல இயக்குநர்களுக்கு பிடித்த பாடகராக இருந்த எஸ்பிபி இளையராஜாவின் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 16 மொழிகளில் அந்த மொழியின் தன்மை மாறாமல் பாடலை பாடுவது எஸ்பிபியின் தனி சிறப்பு.

பல விருதுகள் : சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதினை எஸ்பிபி பெற்றுள்ளார். 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, 2011 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது, ஆறு தேசிய விருதுகள், பிலிம் பேர் விருது 1, தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது, 25 முறை ஆந்திர அரசின் நந்தி விருது, நான்கு மொழிகளில் தேசிய விருதை பெற்ற ஒரே திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி. பாலசுப்பிரமணியன் தான்.
சிறந்த நடிகர் : எஸ்பிபி பாடகராக மட்டுமில்லாமல் சிறந்த நடிகராக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சிகரம், கேளடி கண்மணி,காதல் , உல்லாசம் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தார்: 2020 ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலன் அளிக்காமல், செப்டம்பர் 25ந் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டு மொத்த இசைபிரியர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் இந்த மண்ணை விட்டு மறைந்து இருந்தாலும், இசையால் என்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











