மண்ணை விட்டு மறைந்தாலும்.. மனதை விட்டு மறையாத எஸ்.பி.பியின் டாப் 5 காதல் பாடல்கள்!
சென்னை: இசை உலகம் உள்ளவரை எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் அவரது இன்னிசை குரலும் எங்கேயும் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
திரையில் தோன்றி குழந்தையை போல அவர் நடித்த காட்சிகள் ரசிகர்களின் கண்களை விட்டு ஒரு போதுமே அகலாது.
எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் 2வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், செம ஜாலியாக அவர் பாடிய டாப் 5 காதல் பாடல்கள் பற்றி இங்கே பார்ப்போம்..

ஆயிரம் நிலவே வா
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான அடிமைப் பெண் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். முதல் பாடலே காதல் பாடல் தான். கே.வி. மகாதேவன் இசையில் பி. சுசிலா உடன் இணைந்து புலமைப்பித்தன் வரிகளில் உருவான ஆயிரம் நிலவே வா.. ஓராயிரம் நிலவே வா என எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாட ஆரம்பித்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடி அசத்தினார்.

மண்ணில் இந்த காதல் இன்றி
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரலில் ஒவ்வொரு மொழியிலும் பல ஆயிரம் காதல் பாடல்கள் உருவாகி உள்ளன. இருந்தாலும், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என்றாலே கேளடி கண்மணி படத்தில் அவர் மூச்சு விடாமல் பாடிய மண்ணில் இந்த காதல் இன்றி பாடலுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை என ஏகப்பட்ட ரசிகர்கள் இன்னமும் கொண்டாடி வருகின்றனர்.

காதலின் தீபம் ஒன்று
1984ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இளையராஜா இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய "காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்" பாடல் ஏகப்பட்ட காதலர்களை பாடி உருக வைத்தது. பக்திப் பாடல்களை பாடும் போது தெய்வீகக் குரலும், காதல் பாடல்களை பாடும் போது ஏக்கம் தொனிக்கும் வசீகரிக்கும் குரலில் பாடி ரசிகர்களை கவர்ந்து வந்த ஒப்பில்லா பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.

வளையோசை
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன், அமலா நடித்த சத்யா படத்தில் இளையராஜா இசையில் வாலியின் வரிகளில் லதா மங்கேஷ்கர் உடன் இணைந்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய "வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது" பாடல் எல்லா காதலர்களின் எவர்க்ரீன் ஹிட் என்றே சொல்லலாம்.

தங்க தாமரை மகளே
காதலை தாண்டிய காமத்துடன் கூடிய பாடலாக மின்சார கனவு படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உணர்ச்சி பொங்கும் டோனில் "தங்க தாமரை மகளே வா அருகே" பாடலை தேசிய விருதையே தட்டிச் சென்றார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். இது போன்ற ஒரு பாடலுக்கு எல்லாம் தேசிய விருது வாங்க எஸ்.பி.பியால் மட்டுமே சாத்தியம் என ஒட்டுமொத்த இசை உலகமே போற்றிப் பாடியது அவர் பெருமையை! உங்களுக்கு எஸ்.பி.பி. குரலில் ரொம்ப பிடித்த காதல் பாடல்கள் என்னன்னு கமெண்ட் பண்ணுங்க!


Click it and Unblock the Notifications











