எங்கேயும் எப்போதும் எஸ்.பி.பி. சங்கீதம்.. பாடு நிலா பாலுவுக்கு பிறந்தநாள்.. குவிகிறது வாழ்த்து!
சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் 74வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
மணிரத்னம், இளையராஜா, கருணாநிதி பிறந்தநாளை தொடர்ந்து எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாளும் தமிழ் சினிமா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
எம்.ஜி.ஆர் தொடங்கி தனுஷ் வரை பல நடிகர்களுக்கு தனது இனிய குரலால் பின்னணி பாடலை பாடிய இணையற்ற கலைஞனுக்கு குவிகிறது வாழ்த்துக்கள்.

ஹேப்பி பர்த்டே
1946ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி ஆந்திராவின் நெல்லூரில் பிறந்தவர் பாலு. இயக்குநர், டப்பிங் கலைஞர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல பரிமாணங்களை செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்பட மொத்தம் 16 மொழிகளில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பாடல்களை பாடிய மகா கலைஞன் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஒன் அண்ட் ஒன்லி
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்தில் பாடகர் பாலசுப்ரமணியத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இனிய இசை பிறந்தநாள் வாழ்த்துக்கள் லெஜண்ட் சிங்கர் ஒன் அண்ட் ஒன்லி எஸ்.பி. பாலசுப்ரமணியம் என பாரட்டியுள்ளார்.

இந்தியளவில் டிரெண்டிங்
இந்தியாவின் பல்வேறு மொழிகளில் சினிமா மற்றும் ஆன்மிக பாடல்களை பாடியுள்ள பாலசுப்ரமணியத்திற்கு நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். #HBDSPB என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி அவர் பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள், நடித்த காட்சிகள் என பல பதிவுகளை போட்டு டிரெண்ட் செய்தும் வருகின்றனர்.
ஆயிரம் பாடகர்கள் வந்தாலும்
ஆயிரம் பாடகர்கள் வந்தாலும், எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு ஈடாகாது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் என எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடிய "மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ முடியாது" என்ற பாடல் வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை எஸ்.பி.பிக்கு தெரிவித்து வருகின்றனர்.

இசைக் கலைஞன்
"மடை திறந்து தாவும் நதி அலை நான்.. மனம் திறந்து பாடும் சிறு குயின் நான்.. இசைக் கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது" போன்ற மறக்க முடியாத எண்ணற்ற பாடல்களை பாடியுள்ள பாடு நிலா பாலுவை ஒவ்வொரு ரசிகர்களும் உளமாற வாழ்த்தி, இன்னும் நீண்ட காலம் உங்கள் சேவை தமிழ் சினிமாவுக்கு தேவை என பாராட்டி வருகின்றனர்.

சவால்
எஸ்.பி.பி பாடுன பாடல்ல, இது நல்லாவே இருக்காது, இல்ல பிடிக்காதுனு ஏதாச்சும் ஒரு பாடல் இருந்தா சொல்லுங்க நானும் தெரிஞ்சுக்கிறேன் என இந்த இசை ரசிகர், அப்படி ஒரு பாடலை கூட எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியதில்லை என்ற ஓப்பன் சேலஞ்சை சமூக வலைதளத்தில் விட்டுள்ளார். அந்த அளவுக்கு ஓடாத படங்களிலும் இவர் பாட்டுக்கென தனி கூட்டம் இருப்பது நிதர்சனமான உண்மை.

கோடி முறை கேட்டாலும்
காதலின் தீபம் ஒன்று. மண்ணில் இந்த காதல் அன்றி, மன்றம் வந்த தென்றலுக்கு, இளைய நிலா பொழிகிறதே, வலையோசை கலகலவென, என கோடி முறை கேட்டும் அந்த காந்தக் குரலின் ஈர்ப்பு துளி கூட குறையவில்லை என இவரை போல பல ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











