உன்னைவிட்டு எப்படி தனியாக இருக்க போகிறேன்.. மனைவியிடம் கடைசியாக எஸ்பிபி பேசிய உருக்கமான பேச்சு!
சென்னை: மருத்துவமனைக்கு செல்லும் முன்பாக தனது காதல் மனைவியிடம் எஸ்பி பாலசுப்ரமணியம் கண்ணீர்மல்க பேசிய உருக்கமான பேச்சு வெளியாகியுள்ளது.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

காதல் திருமணம்
மருத்துவமனையில் 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் கடைசியாக தனது மனைவியிடம் கண்ணீர் மல்க உருக்கமாக பேசிய பேச்சை அவரது குடும்பத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர். எஸ்பி பாலசுப்ரமணியம் தனது மனைவி சாவித்ரியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

கோவிலில் திருமணம்
கல்லூரி நாட்களில் சாவித்ரியுடன் காதல் மலர பெற்றோரின் எதிர்ப்பை மீறி, அவரை நண்பர்கள் முன்னிலையில் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார் எஸ்பிபி. அவர்களுக்கு சரண் என்ற மகனும் பல்லவி என்ற மகளும் உள்ளனர். எஸ்பி பாலசுப்ரமணியம் தனது மனைவி இல்லாமல் எங்கேயும் சென்றதில்லையாம்.

சண்டையே வந்ததில்லை
30 ஆண்டுகளுக்கும் மேலாக சாவித்ரியுடன் வாழ்ந்த எஸ்பி பாலசுப்ரமணியம் ஒரு முறைக்கூட தனது மனைவியிடம் சண்டை போட்டதே இல்லையாம். கடைசியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதுதான் முதல் முறையாக தனது மனைவியை பிரிந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

வருவேனோ இல்லையோ
மருத்துவமனைக்கு செல்லும் முன்பாக, உன்னை விட்டு பிரிந்து எப்படி இருக்க போகிறேனோ என கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். அதோடு நான் திரும்பி வருவேனோ, வராமல் போய்விடுவேனோ தெரியவில்லை. நான் மீண்டு வராவிட்டால் எந்த சூழ்நிலையிலும் நீ உடைந்து போய்விடக்கூடாது என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.

வீடியோ காலில் பேச்சு
மேலும் தனக்கு பிறகு நீதான் இந்த குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும் என்றும் கூறினாராம் எஸ்பிபி. இதனைக் கேட்டு அவரது மனைவியும் கதறி அழுதுள்ளார். மருத்துவமனைக்கு வந்த பிறகும் தனது மனைவியுடன் தினமும் வீடியோ காலில் பேசி வந்துள்ளார் எஸ்பி பாலசுப்ரமணியம்.

நிரந்தரமாக பிரித்துவிட்டான்
மருத்துவமனையில் இருந்தப்படி தனது திருமண நாளையும் கொண்டாடினார் எஸ்பிபி. தற்போது இருவரையும் நிரந்தரமாகவே பிரித்துவிட்டான் காலன். எஸ்பிபியின் மறைவை எப்படி தாங்கிக்கொள்ள போகிறார் அவரது மனைவி சாவித்ரி என வேதனையுடன் கூறியுள்ளனர் அவரது குடும்பத்தினர்.


Click it and Unblock the Notifications











