எஸ்.பி.பி-க்கான மருத்துவச் சிகிச்சை கட்டணம் குறித்து வதந்தி பரப்புவதா? எஸ்.பி.சரண் வருத்தம்!
சென்னை: எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மருத்துவக் கட்டணம் குறித்து வரும் வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் எஸ்.பி.சரண்.
Recommended Video
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 25 ஆம் தேதி மரணமடைந்தார்.
கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் 51 நாட்கள் சிகிச்சையில் இருந்தார்.

அரசு மரியாதை
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் மரணமடைந்தார். அவர் உடல், தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் மறைவு ஒட்டு மொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவருக்கு நேரில் ஏராளமான திரையுலகினரும் ரசிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சிகிச்சை கட்டணம்
சமூக வலைதளங்களிலும் திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை நிர்வாகம், அவரிடம் அதிகமான சிகிச்சை கட்டணம் கேட்டதாகவும் இந்த பிரச்னையில் தமிழக அரசு, குடியரசு துணைத் தலைவர் தலையிட்டதாகவும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்திகள் வெளிவந்தன.

எஸ்.பி.பி.சரண் விளக்கம்
இந்நிலையில் இதுபற்றி எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் சரண் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: எம்ஜிஎம் மருத்துவமனை பற்றியும் அப்பாவுக்கான சிகிச்சைக் கட்டணம் பற்றியும் வந்துகொண்டிருக்கும் வதந்திகள் துரதிர்ஷ்டவசமானது. அவர் சிகிச்சைக்கு மொத்தமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது பற்றி வதந்தி பரவுகிறது.

துணைத் தலைவர்
நாங்கள் இன்னும் பணம் பாக்கி வைத்திருப்பதாகவும் இதற்காக தமிழக அரசிடம் பேசியதாகவும் குடியரசுத் துணைத் தலைவரிடம் கோரிக்கை வைத்ததாகவும் அவர் மகள் உதவியதாகவும் ஒரு செய்தி உலவுகிறது. மேலும் நாங்கள் பாக்கி பணத்தை தரும் வரை அப்பாவின் உடலை மருத்துவமனை ஒப்படைக்கவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

எஸ்.பி.பி மன்னிப்பார்
இவை அனைத்தும் பொய். இதை ஏன் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்களை இது எப்படிப் பாதிக்கும் என்பது கூட புரியாமல், ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் எஸ்பிபியின் ரசிகர்களாக இருக்க முடியாது. இதுபோன்ற வதந்திகளைப் பரப்பும் நபரை எஸ்.பி.பி மன்னிப்பார்.

நன்றியுடன் இருப்போம்
இதுபோன்ற வதந்திகளைத் தெளிவுபடுத்த நானும், மருத்துவமனைத் தரப்பும் அறிக்கை ஒன்றை தர இருக்கிறோம். எம்ஜிஎம் செய்த அத்தனை சிகிச்சைகளுக்கும், எங்கள் குடும்பத்துக்குச் செய்த உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்போம். மருத்துவமனைக் கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும். ஆனால், அதுவரை தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். இவ்வாறு எஸ்பிபி சரண் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











