SP Charan: என்ன கேள்வி கேக்குறீங்க.. சும்மா இருங்க.. செய்தியாளர்களிடம் கடுப்பான எஸ்.பி.பி. மகன்!
சென்னை: இந்திய சினிமாவையே தனது குரலால் அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்தவர் எஸ்.பி பாலசுப்பிரமணியம்.
இவர் 2020ம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். எஸ்பிபியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

1966 முதல் கிட்டத்தட்ட 16 மொழிகளில் தனது ஆளுமையை நிலை நாட்டி வந்த எஸ்பிபி ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் ஜூன் 4ஆம் தேதி 1946 அன்று பிறந்தார்.
பாலசுப்ரமணியம் நினைவு தினம்: இசையின் ஜாம்பவனாக விளக்கிய பாலசுப்ரமணியம், ஒவ்வொரு தலைமுறையினருக்கு ஏற்றவாறு பாடி அந்தந்த தலைமுறையினரின் மனதில் இடம்பிடித்து கடைசி மூச்சு வரை அவரது இனிமையான குரலில் பாடல்களை பாடி உயிர் பிரிந்த உத்தமரின் 3 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரது மகன் எஸ்.பி. சரண், திருவள்ளூர் பொன்னேரியில் உள்ள பாலசுப்ரமணியம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
வாழவைத்த ரசிகர்கள்: பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இத்தனை வருஷங்கள் அப்பாவை வாழ வைத்த, அவரது பாடல்கள் மூலம் வாழவைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. அப்பாவுக்காக நான் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன். அதை முடித்துவிட்டு அரசிடம் போகவுள்ளேன். ரசிகர்களின் ஆசைப்படி அரசாங்கம் மணிமண்டபம் கட்டினால் நல்லது தான்.
மணிமண்டபம்: இது எல்லாம் அரசின் காதில் விழட்டும் எது நடக்க வேண்டுமோ அது நடக்கட்டும், அவருக்கு எது தகுதியாக இருக்குமோ அதை அரசாங்கம் செய்யட்டும். மணிமண்டபத்துக்கு தொகை கொடுங்க என்று நான் கேட்பது சரியாக இருக்காது. நான் அப்பாவுக்காக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டுத்தான் இருக்கிறேன். இவை எல்லாத்தையும் நான் ரசிகர்களுக்காக செய்யவில்லை, அவரின் மகனாக செய்கிறேன் என்றார்.
எஸ்.பி.பி பொதுச்சொத்து: அப்போது, செய்தியாளர் ஒருவர் எஸ்.பி.பியின் பாடல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், எங்கிட்டே அப்படி யாரும் சொன்னதில்லை. அதெல்லாம் தேவையில்லை. அப்போ நாங்க எல்லாம் பாடக்கூடாதா, யார் வேண்டுமானாலும் பாடலாம். எஸ்.பி.பி என்பது பொதுச் சொத்து. அவருடைய பாடலைக்கேட்டு அனைவரும் மகிழ்ச்சியா இருங்க என்றார்.


Click it and Unblock the Notifications