திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் தலைவர் கேயாருக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. இதில் கேயார் அணி வெற்றி பெற்றது. இத்தேர்தலில் தோல்வி அடைந்த கலைப்புலி எஸ்.தாணு தேர்தலில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடர்ந்தார். பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் அதில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார்.
இதில் தேர்தல் முறைகேடு உள்ளிட்ட சில வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிமன்றம், முன்னாள் நீதிபதி முன்னிலையில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும். அதில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
நீதிமன்ற உத்தரவுப்படி இன்று எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பொதுக்குழு கூடியது. கேயார் அணியில் இருந்த செயலாளர் டி.சிவா, துணை தலைவர் டி.ஜி.தியாகராஜன், பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாணு அணிக்கு தாவிட்டனர். இதனால் கேயார் அணியுடன் தாணு அணியும் பலமானதாக மாறியது.
இன்று காலை பொதுக்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் ஒரு கட்டத்தில் மோதலாகவும் வெடித்தது. இருதரப்பினரும் மோதிக் கொண்டனர்.
இந்த மோதல்களுக்கு நடுவே நீதிமன்ற உத்தரவுப்படி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பதிவான வாக்குகள் நீதிபதி சண்முகம் முன்னிலையில் எண்ணப்பட்டன.
மொத்தம் 449 வாக்குகளில் கேயார் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு 261 பேர் ஆதரவு அளித்தனர். இத்தீர்மானத்தை எதிர்த்து 186 வாக்குகள் பதிவாகின. 2 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. இதனால் கேயார் பதவி விலக வேண்டிய நிலை உருவாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











