தமிழுக்கு பெருமை சேர்த்தவர் எஸ்.பி.பி.. நேரில் இறுதி அஞ்சலி செலுத்திய நடிகர் அர்ஜுன் புகழாரம்!
சென்னை: தமிழுக்கு பெருமை சேர்த்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் என அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் அர்ஜுன் புகழாரம் சூட்டினார்.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் செங்குன்றம் அடுத்து உள்ள தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், நடிகர்கள் விஜய், அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இறுதி சடங்குகள்
எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து உடைந்து போன அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தனது தந்தைக்கு இறுதி சடங்குகளை முறைப்படி செய்தார். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில பிரபலங்கள் மட்டுமே இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர்.

அர்ஜுன் நேரில் அஞ்சலி
நடிகர் விஜய், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட வெகு சில பிரபலங்களே எஸ்.பி. பாலசுப்ரமணியம் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர். நடிகர் அர்ஜுன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இறுதி சடங்கில் கலந்து கொண்டு எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தமிழுக்கு பெருமை
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அர்ஜுன், எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழுக்கு மிகப்பெரிய பெருமையை சேர்த்துள்ளார். தெலுங்கு, கன்னடம் மொழிகளில் அவர் ஏகப்பட்ட பாடல்களை பாடி இருந்தாலும், தமிழும் தமிழர்களும் தான் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றார்.

இசை உலகம் மட்டுமல்ல
எஸ்.பி. பாலசுப்ரமணியம் சார் மறைவு இசை உலகிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களுக்குமான பேரிழப்பாகவே கருதுகிறேன். பாலு சார் இனி இல்லை என்பதே ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. எப்படியாவது திரும்பி வந்துடுவாருன்னு பார்த்தோம்.. ஆனால், அவர் எல்லாரையும் ஏமாத்திவிட்டார் என அர்ஜுன் உருக்கமாக பேசினார்.


Click it and Unblock the Notifications











