கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் எஸ்.பி.பி... மயக்க நிலையில் இருந்து மீண்டார்.. தொடர்ந்து கண்காணிப்பு!
சென்னை: கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. பல்வேறு நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ், பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

பேதம் பார்ப்பதில்லை
இந்தியாவிலும் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று சாதாரண மனிதர்கள், பணக்காரர்கள், பிரபலங்கள் என்ற பேதங்களை பார்ப்பதில்லை. எல்லோரையும் ஒன்றாக வைத்து பதம் பார்த்து வருகிறது. அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், நடிகர் விஷால், இயக்குனர் ராஜமவுலி ஆகியோர் கொரோனா பாதிப்பால், சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இதற்கிடையே பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டார். தொற்று உறுதியானதும், தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
அதில், தனக்கு மிகவும் லேசாக கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாவும் கூறியிருந்தார்.

சீராக உள்ளது
எனினும், தனது உடல்நிலை சீராக உள்ளது எனவும் விரைவில் திரும்பி வருவேன் எனவும் கூறியிருந்தார். இதையடுத்து இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரை பிரபலங்களும் அவர் ரசிகர்களும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளனர். சமூக வலைதளங்களிலும் அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் உடல்நிலை குறித்து மருத்துவமனை கடந்த சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது.

தீவிர சிகிச்சை பிரிவு
அதில், அவரை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவருக்கு சீரான ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் அவர் உடல்நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியானது. தீவிர சிகிச்சைக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நுரையீரல் தொற்று
பின்னர், கவலைக்கிடமாக அவர் இருப்பதாக வந்த செய்தியை, அவர் மகன் எஸ்.பி.பி.சரண் மறுத்திருந்தார். இந்நிலையில் அவர் உடல் நிலை தேறிவருவதாகவும் மயக்க நிலையில் இருந்து அவர் மீண்டுள்ளதாகவும் அவ்வப்போது கண்விழிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் நுரையீரல் தொற்று காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்குச் சிகிச்சை தொடர்ந்து வருவதாகக் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











