ஒரே பாறையில் வடிவமைக்கப்பட்ட எஸ்பிபி முகம்... விறுவிறுப்பாக நடக்கும் நினைவு இல்ல பணிகள்
சென்னை : கொரேனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மறைந்தார் பிரபல பாடகர் எஸ்பிபி. இவரது மறைவு அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது. ஆயினும் இவரது பாடல்கள் ரசிகர்களுக்கு அவரது இழப்பை ஈடுசெய்யும் மாற்றாக அமைந்துள்ளது. இந்நிலையில் அவரது நினைவு இல்லத்தை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாடகர் எஸ்பிபி
ஆயிரக்கணக்கான பாடல்களை தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார் பிரபல பாடகர் எஸ்பிபி. இவரது மயக்கும் குரலுக்கு கட்டுப்பட்டிருந்தனர் அவரது ரசிகர்கள். எம்ஜிஆர், சிவாஜி முதல் தற்போதைய இளம் நடிகர்கள் வரை இவர் குரல் அனைவருக்கும் பொருந்தியது இவரது சிறப்பாக இருந்தது.

இறுதியாக ரஜினிக்கு குரல்
தொடர்ந்து அண்ணாத்த படத்திலும் இவர் ரஜினிக்கு குரல் கொடுத்திருந்தார். வயதானாலும் இவரது குரலின் வசீகரம் அனைவரையும் கவர்ந்தே வந்தது. ஆனால் சமீபத்தில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், அதற்கு பலியானார். இது யாரும் எதிர்பார்க்காத வகையில் நடந்து முடிந்துவிட்டது.

எஸ்பிபிக்கு நினைவிடம்
இதையடுத்து இவரது உடல் திருவள்ளூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் அங்கு அவரது நினைவு இல்லம் அமைக்கப்படும் என்று அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்திருந்தார். இந்த பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஒரே பாறையில் எஸ்பிபி உருவம்
இங்கு அமையவுள்ள சிலைகள், புதுச்சேரியை அடுத்துள்ள ஆரோவில் சஞ்சீவி நகரில் உள்ள சிற்பக்கூடத்தில் உருவாகி வருகிறது. 6 டன் எடையுள்ள ஒரே பாறையில் எஸ்பிபியின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாறை திருவக்கரையில் இருந்து வரவழைக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்துள்ளன.

6 சிற்பிகள் இணைந்து வடிவமைப்பு
மேலும் அவர் அடிக்கடி உச்சரிக்கும் சர்வே ஜனாஸ்ஸு, ஜனா பவந்து, ஸர்வேசு ஜனா சுகினோ பவ என்ற மந்திரமும் இந்தப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பத்தை 6 சிற்பிகள் இணைந்து வடிவமைத்துள்ளனர். தற்போது இதை அவரது நினைவு இல்லத்தில் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

எஸ்பிபி உச்சரிக்கும் மந்திரம்
எல்லாரும் மகிழ்ச்சியாகவும் நோயின்றி ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும், அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டும், ஒருவரும் துயரம் அடையக்கூடாது என்பதே இந்த சமஸ்கிருத மந்திரத்தின் அர்த்தம். இந்த மந்திரம் எஸ்பிபியின் உருவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது சிறப்பான செய்தியாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications











